அது ஏன் அன்புமணியே எப்போதும்... வேறு தலைவர்களே இல்லையா.. பாமகவில் வெடித்தது முணுமுணுப்பு!
அன்புமணிக்கே ராஜ்ய சபா சீட் தரப்படுவதால் தொண்டர்கள் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: அது ஏன் எப்போதும் அன்புமணியே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்தப்படுகிறார்... வேறு தலைவர்களே கட்சி தலைமைக்கு கண்ணில்படவில்லையா? இப்படியே ஒவ்வொரு முறையும் அன்புமணியையே தேர்ந்தெடுத்து கொண்டிருந்தால், மக்கள் என்னதான் நினைப்பார்கள்? என்பதுதான் பாமக தரப்பினரின் கேள்வி.
ராஜ்ய சபாவுக்கு செல்ல போகிறார் அன்புமணி. இதற்கான அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் முற்றும் பூரணமாக முடிவடைந்த நிலையில், தொண்டர்களில் பெரும்பாலானோரை திருப்திப்படுத்த முடியவில்லை.
7+1 = என்று பாமக அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டபோதே யார் இந்த 1 ஒன்று பரபரப்பான பேச்சாக எழுந்தது. அப்போதும் அன்புமணி பெயர்தான் பரிசீலிக்கப்பட்டது. அதையும் தாண்டி ஒரு பெயர் பரிசீலனையில் வந்து போனது என்றால் அது சவுமியா அன்புமணிதான்.
சட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல்
அறிவாளி
ராஜ்யசபாவுக்கு செல்ல அன்புமணிக்கு எல்லா தகுதிகளுமே உள்ளன. திறமைசாலி. படித்த அறிவாளி. ஆனால் இவர் ஏற்கனவே ராஜ்யசபாவுக்கு போய் விட்டார். லோக்சபாவிலும் இருந்து விட்டார். அமைச்சர் பதவியும் வகித்து விட்டார்.
குழப்பம்
அதற்காக தொடர்ந்து டெல்லிக்கு போய் கொண்டே இருக்க வேண்டுமா, அன்புமணியையும் தாண்டி வேறு தலைவர்களே பாமகவில் இல்லையா? அல்லது அனுபவம், திறமை வாய்ந்த மற்ற தலைவர்களை உயரத்தில் வைத்து பார்க்க வேண்டிய பெருந்தன்மையும் பாமக தலைமையிடம் குறைந்துள்ளதா போன்ற குழப்பமான சந்தேகங்களைதான் பாமகவினர் கடந்த மாதமே எழுப்பி வந்தனர்.
தொண்டர்கள்
அது மட்டுமில்லை, அதிமுக கூட்டணி காரணமாக இன்னும் அதிருப்தியே தொண்டர்கள் மத்தியில் அடங்காமல் உள்ளது. அதனால் மூத்த தலைவர்கள் யாருக்காவது ராஜ்ய சபா சீட் தந்து, அன்புமணி இங்கேயே இருந்து கட்சியை பலப்படுத்தி, தொண்டர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினால் நன்றாக இருக்கும் என்றும் யோசனை தரப்பட்டது.
டாக்டர் ராமதாஸ்
தொண்டர்களின் இந்த உணர்வினை நிறுவனர் டாக்டர் ராமதாசும் உணர்ந்துள்ளதாகவும், அதனால் எப்படியும் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, அல்லது கட்சி தலைவர் ஜிகே மணி இவர்களில் ஒருவரை டெல்லிக்கு அனுப்பலாம் என்றுகூட யோசித்துள்ளார்.
தைலாபுரம்
ஆனால், அன்புமணியும், குடும்பத்தினரும்தான் ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு சீட் தரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நாங்கள் இவ்வளவு காலம் உழைத்த உழைப்பெல்லாம் தைலாபுரம் குடும்பத்தினர் மட்டும்தான் அனுபவிக்க வேண்டுமா, என்ற கேள்வி கட்சிக்குள் முணுமுணுக்க தொடங்கி உள்ளதாம்.
காடுவெட்டி குரு
வேல்முருகன் கட்சிக்குள் இருந்திருந்தால் நிலைமை வேறு, அல்லது குரு உயிரோடு இருந்திருந்தால் பாமகவின் நிலைமை இந்நேரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அன்புமணியை விட்டால் பாமகவில் ஆளே இல்லை என்ற பேச்சு எழுந்துள்ளதுடன், பாமக என்றாலே ராமதாஸ், அன்புமணி என்று ஆகிவிட்டது. இந்த நிலைமையை மாற்ற வேண்டியது உடனடி அவசியமாகிறது. அன்புமணியையும் தாண்டி வேறு தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதை டாக்டர் ராமதாஸ் எப்படி சமாளிப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!