பருத்தி மூட்டை குடோனில் இருப்பதே நல்லது.. ஏன்னா அந்த 2 பேர் உள்ளே வந்தால்.. இந்த 2 பேருக்கு சிக்கல்!
பாமக தனித்து நின்று போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்
சென்னை: பெரும்பாலான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக யோசித்து வருவதாகவும், அந்த முடிவின்படியே கூட்டணி கட்சிகளுக்கு சீட் தருவதாகவும் பேசப்பட்டு வருகிறதாம்.
பரவி வரும்கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. திமுக, அதிமுக மெகா கட்சிகள் கூட்டணி குறித்தும் சீட் ஒதுக்கீடு குறித்தும் பேச்சை மறைமுகமாகவும் அதே சமயம் பலமாகவும் ஆரம்பித்துவிட்டனர்.
கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகளும் தங்களுக்கான வியூகத்தை அமைத்து வருகின்றனர்.இதில் இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் பாமகவும்தான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
திமுக
திமுக கூட்டணியில் பாமக உள்ளே வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிது.. அதற்கேற்றபடி நேற்று ராமதாஸ் பதிவிட்ட ட்வீட் அதிமுகவை சலசலப்புக்கு உள்ளாக்கி வருகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் பாமக உள்ளே வருவதானால், கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளின் நிலை என்னாகும் என்பது உறுதியாக தெரியவில்லை.. இதை பற்றி ஒருசிலரிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:
துரைமுருகன்
"ராமதாஸ் அறிக்கையோ, ட்வீட்டோ பதிவிட்டால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.. பாமகவை திமுக கூட்டணிக்கு உள்ளே இழுத்து வருவதில் துரைமுருகன் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்து ஆர்வம் காட்டிட்டு இருக்காரு.. ஆனால், அதிமுக, திமுக ரெண்டுமே பாமகவுக்கு ஒன்றுதான்.. பாமக தரப்பில் வைக்கப்படும் ஒரே கோரிக்கை அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி + கூடுதல் சீட் என்பதுதான்.. திமுகவில் இதே துணை முதல்வர் பதவிக்கு உதயநிதியை முன்னிறுத்தி வரும்போது, பாமகவின் எதிர்பார்ப்பு கொஞ்சம் சிக்கல்தான்.
அதிமுக
ஆனால் இப்படி ஒரு சிக்கல் அதிமுகவில் இல்லை.. நிச்சயம் பாமகவை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டார்கள்.. வடமாவட்டங்களை ராமதாஸ் வைத்துதான் இவர்கள் வாக்கை அள்ள வேண்டி இருக்கு.. அதனால்தான் நேற்று ராமதாஸ் ட்வீட் போட்ட உடனேயே அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணிக்குள் ஒரு குழப்பமும் இல்லை என்று விளக்கம் தந்தார்.
தனி இட ஒதுக்கீடு
இப்போதைக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை என்று பாமக செக் வைத்துள்ளது.. ஒருவேளை அதிமுக, திமுக இந்த கட்சிகள் இதை ஏற்குமானால், வன்னியர் அல்லாத ஜாதிகளின் ஓட்டுகளை நிச்சயம் 2 மெகா கட்சிகளும் இழக்க நேரிடும்... அதனால் ரெண்டு கட்சிகளுக்குமே கொஞ்சம் சிக்கல்தான்.. இந்த இடத்தில்தான் ராமதாஸ் அரசியல் சாணக்கியத்தினம் வெளிப்படுகிறது.. 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. ஒருவேளை 2 கட்சியுமே தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், தனித்து போட்டியிடவும் பாமக தயங்காது என்பதை உணர்த்தவே இந்த அறிவிப்பு.
கூட்டணி
ஒருவேளை, பாமகவின் கண்டிஷன்களுக்கு திமுக ஒப்புக் கொண்டால், கூட்டணியில் இருக்கும் விசிகவுக்கு சிக்கல்தான்.. இப்போதைக்கு விசிகவுக்கு 4 + 4 என்ற ரீதியில்தான் தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருக்கிறதா தெரியுது.. அதாவது, பாதி உதயசூரியன் சின்னம், மீதி பாதி சொந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவதாம்.. சொந்த கட்சி சின்னத்தில் தோற்றாலும், உதயசூரியன் சின்னத்தின் வெற்றியாவது திமுகவுக்கு கிடைக்குமே என்று கணக்கு போடுகிறது போலும்.
சின்னம்
ஏனென்றால், சிதம்பரத்தில் சொந்த கட்சி சின்னத்தில் ஜஸ்ட் பாஸ் ஆகி தான் வாக்குகளை எடுத்திருந்தார் திருமா.. அதனால் இந்து முறை தனி தனி சின்னத்தில் போட்டியிடலாம்... அல்லது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிடும் நிலைமையும் வரலாம் என்பதால், இதற்கெல்லாம் விசிக ஒப்புக் கொள்ளுமா என தெரியவில்லை
விசிக? வேல்முருகன்?
ஆனால், பாமக கூட்டணிக்குள் உள்ளே நுழைந்துவிட்டால், இந்த சீட் விசிகவுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.. அப்படி பாமக உள்ளே வந்தால், வேல்முருகன் என்ன செய்வார் என்பது அதைவிட பெரிய எதிர்பார்ப்புதான்... எப்படியும் பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் 2 கட்சிக்கு சிக்கல் இருக்கும் என்றே தெரிகிறது" என்றனர்.