சரத்குமாரை நிறுத்துங்க.. சகல சப்போர்ட்டையும் கொடுங்க.. காங்கிரஸ் திணறும்.. அதிமுகவில் அதிரடி!
நாங்குநேரியில் சரத்குமார் வேட்பாளராக அறிவிக்க அதிமுக யோசித்து வருவதாக தெரிகிறது
Recommended Video
சென்னை: நாங்குநேரியில் சமக தலைவர் சரத்குமாரை போட்டியிட வைத்தால் என்ன என்கிற ஒரு பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.
நடக்க போவது 2 தொகுதி இடைத்தேர்தல்.. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட பெரும்பாலானோர் நெருங்கவில்லை. இதற்கு காரணம் அமைச்சர் சிவி சண்முகம்.
யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று அதிமுக தலைமையே இவரிடம் முடிவை விட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வந்தது. விழுப்புரம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது அமைச்சரின் பிடியில்தான்! அதனால்தானோ என்னவோ விக்கிரவாண்டியை விட நாங்குநேரியில் அதிகம் பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
நாடார்
நாங்குநேரி தொகுதியில் நாடார் சமுதாய மக்களே அதிகம். அதனால்தான் கட்சி பாகுபாடு இல்லாமல், இந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். நாங்குநேரி தொகுதிக்கு பக்கத்து தொகுதியான ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட, ஆனைகுடி கிராமத்தை சேர்ந்த ராக்கெட் ராஜா நாடார் சமுதாயம்தான். மிகவும் பிரபலமான புள்ளியாக இருக்கும் இவர், இந்த முறை களத்தில் இறங்க போவதாக ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.
சமுதாய வாக்கு
இதே சமுதாய வேட்பாளர்கள் ஒவ்வொரு கட்சி சார்பாக நிறுத்தப்பட்டாலும், ஓட்டுக்கள் பிரியவும் வாய்ப்பு உள்ளது. மறுபக்கம் சமக தலைவர் சரத்குமார் பெயர் இந்த முறை அடிபட ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம், சமுதாயம் சார்ந்த ஓட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சரத்குமாருக்கென்று குறிப்பிட்ட வாக்குவங்கி நெல்லை மாவட்டத்தில் பலமாகவே உள்ளது.
விஐபி வேட்பாளர்
கடந்த பல ஆண்டுகளாகவே அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் சமக செயல்பட்டு வந்தது. நடந்து முடிந்த எம்பி தேர்தலின்போதே, திமுகவின், விஐபி., வேட்பாளரான, கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டபோது, நாடார் சமூக ஓட்டுகளை, மொத்தமாக தங்கள் கூட்டணி கைப்பற்ற, சரத்குமார் ஆதரவு தேவை என்பதை அதிமுக உணர்ந்திருந்தது. இப்போதும் அப்படித்தான் பேச்சு எழுந்துள்ளது. ஒருவேளை சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், வெற்றியும் எளிது என்றுதான் கணிக்கப்படுகிறது.
பிரச்சாரம்
அது மட்டுமில்லை.. சரத்குமார் வாக்கு சேகரிப்பதுகூட எப்போதுமே வித்தியாசமாகவே இருக்கும். ரோட்டில் வந்து கொண்டிருந்த ஒரு தொண்டர் பைக்கில் திடீரென ஏறி உட்கார்ந்து கொண்டு வாக்கு கேட்பார். சிலம்பாட்டம் ஆடிக் கொண்டிருந்த மைதானத்திற்கு சென்று, தானும் ஒரு சிலம்பம் எடுத்து சுழட்டி சுழட்டி அடித்து வாக்கு கேட்பார்.
தலைமை முடிவு
இப்படி பல யுக்திகளை பிரச்சாரத்தில் சரத்குமார் கையாண்ட விதமும் மக்களை ரசிக்கவே செய்தது. சமுதாய வாக்கு + நட்சத்திர அந்தஸ்து + கவரும் பிரச்சாரம் போன்றவைகளில் முக்கிய சாய்ஸ் சரத்குமாராக இருக்கிறதாம். ஆனால் வேட்பாளராக யாரை அதிமுக தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதுதான் இதுவரை தெரியவில்லை.
தடுமாற்றம்
அதேசமயம், சரத்குமாரை வேட்பாளராக அறிவித்து, இரட்டை இலையில் போட்டியிட வைத்து, சகல சப்போர்ட்டுகளையும் வாரிக் கொடுத்து தீவிரப் பிரச்சாரம் செய்தால் நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளர் தடுமாறுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள்.