தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்
தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: தங்க தமிழ்செல்வனை திமுகவில் இழுக்கும் வேலைகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்துள்ளன. இதனால் அதிமுக, அமமுக தரப்பு கூடாரங்கள் அதிர்ந்து காணப்படுகின்றன. தற்போது தங்க தமிழ்ச்செல்வன் திமுக தலைமையிடம் சில அதிரடியான கோரிக்கைகளை வைத்துள்ளாராம். உத்தரவாதம் கிடைத்தால் தாவத் தயாராக இருக்கிறாராம்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி, "திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்" என்று தங்க தமிழ்செல்வன் சொல்லி இருந்தபோதே நமக்கு என்னவோ ஒரு ஜெர்க் வந்துபோனது. ஆனால் இது இன்று விஸ்வரூபமெடுக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
எதேச்சையாக ரிலீஸ் ஆனது போல, ஒரு ஆடியோ நேற்று வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் வெடித்ததில் இருந்தே தங்க தமிழ்செல்வன் எந்த கட்சிக்கு செல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து வெடித்து கிளம்பியது. அதுவும் அதிமுகவில் இணைய உள்ளதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்.. டிடிவி தினகரன்
செல்லூர் ராஜு
உண்மையிலேயே, தங்க தமிழ்செல்வனை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை எப்போதோ மேற்கொண்டு வருவது திமுகதான் என்று சொல்லப்படுகிறது. இதைதான் கடந்த மே 10-ம் தேதிவாக்கில், அமைச்சர் செல்லூர் ராஜூ, "தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டே அவருக்கு எதிரான செயல்களை செய்துகொண்டு இருக்கிறார். செந்தில் பாலாஜியைப் போல அவரும் திமுக நோக்கி செல்வார்" என்று கூறியிருந்தார்.
உட்பூசல்
ஒரு அமைச்சரே இப்படி கூறிய நிலையில், அந்த பக்கம் தங்க தமிழ்செல்வன் செல்வாரா? என்பது சந்தேகம். தேனியில் உட்கட்சிப் பூசலை தாண்டி அதிமுகவுக்கு தாவுவாரா? அல்லது, ஓபிஎஸ்ஸை பகைத்துகொண்டு, தங்க தமிழ்செல்வனை அரவணைத்து கொள்ள அதிமுக தயாரா என்பது சந்தேகம்தான்.
முதல்வர் பழனிசாமி
அது மட்டுமில்லை.. இந்த 3 வருடத்தில் அதிமுகவை அதிகம் விமர்சித்தது தங்கதமிழ்செல்வன்தான். "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொள்ளை, கொலைப் பழி வந்திருக்கு. நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்காமல் விடாப்பிடியாக முதல்வர் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்'' என்று பகிரங்கமாக சொன்னவர். அதனால்தான் திமுக இவரை இழுப்பதாக தகவல்கள் கசிந்தன.
விபி கலைராஜன்
ஆனால் இந்த தகவல் ஓரளவு உண்மை என்றும் கூறப்படுகிறது. தற்போது தங்க தமிழ்ச்செல்வனை இழுக்கும் வேலையை 2 பேரிடம் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். செந்தில் பாலாஜியும், வி.பி. கலைராஜனும்தான் அவர்கள். இருவருமே அமமுகவில் தினகரனுக்கு நெருக்கமானவர்கள். பின்னர் அங்கிருந்து விலகி திமுகவுக்கு வந்து சேர்ந்தவர்கள். செந்தில் பாலாஜி மீண்டும் எம்எல்ஏவாகி விட்டார். கலைராஜன் பதவிக்காக காத்திருக்கிறார்.
தென் மாவட்டம்
செந்தில் பாலாஜி மேற்கு மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளவர் என்றால் தங்க தமிழ்செல்வனோ, கட்சியையும் தாண்டி அவரது தொகுதியில் வெற்றி பெறும் செல்வாக்கை உடையவர். அது மட்டுமில்லை, தென்மாவட்டங்களில் உள்ள கட்சியினரின் நன்மதிப்பை பெற்றவர். இவரை உள்ளே இழுத்தால், தென்மாவட்டங்களை பற்றின கவலை இனி இருக்காது என்று திமுக கருதுகிறது.
திமுக முயற்சி
இதைதான் தங்க தமிழ்செல்வன் சரியாக பயன்படுத்தி கொள்ள முயன்று வருகிறார். ஏற்கனவே 3 வருட அரசியல் வாழ்வை தொலைத்துள்ளார், வருமானம் இல்லை, தகுதி நீக்க வழக்கு, கோர்ட், கேஸ் என எல்லாவற்றிலும் சரிவுகளை கண்ட தங்க தமிழ்செல்வன், திமுக தரப்பிடம் பெரிய டிமாண்ட் ஒன்றினை வைத்துள்ளதாக தெரிகிறது. ஒன்று செந்தில்பாலாஜிக்கு தந்ததை போன்ற பெரிய பொறுப்பு அல்லது "மேற்படி"சமாச்சாரங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சூட்சுமம் இதுதான்
தங்க தமிழ்செல்வனின் டிமாண்ட் எதுவானாலும் அதை செய்து தர திமுக தயாராகவே உள்ளதாம். ஏனெனில் பெரிய தலையை உள்ளே இழுத்துபோடுவிட்டால், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள மற்றவர்களும் எளிதாக திமுகவுக்குள் நுழைய இயலும் என்பதுதான் இந்த கணக்கு வழக்கின் சூட்சுமம்! கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை செந்தில்பாலாஜியும், கலைராஜனும் செய்து முடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.