நாள் குறிச்சாச்சு.. அசைன்மென்ட் தந்தாச்சு.. வேகம் எடுக்கும் அதிமுக.. மிரட்சியில் அமமுக!
தென்மாநில அமமுக நிர்வாகிகளை அதிமுகவில் இழுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: கிட்டத்தட்ட பாதி அமமுக காலியாக போகிறதாம்.. நாளும் குறித்தாயிற்றாம்.. இதுதான் இப்போதைக்கு அரசியல் பரபரப்பு பேச்சாகும்!
இப்படி ஒரு தேர்தல் ரிசல்ட் வரும் என்று டிடிவி தினகரன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. தேர்தலுக்கு முன்பு அவர் மீது இருந்த கணிப்பு வேறு, அதற்கு பின்பு வேறாக மாறி உள்ளது!
பொறுமை, அமைதி, எதையும் பக்குவத்துடன் அணுகும் முறை, புன்முறுவல் மாறாத பேச்சு, டென்ஷனே இல்லாத முகம் என்று அனைத்து தரப்பு மக்களையும் வசீகரித்தார் தினகரன். அதே சமயம், இவரது ஒவ்வொரு வியூகங்களை பார்த்து எதிர்தரப்பினர் ஆடிப்போகவும் செய்தனர்.
குழப்பம்
எதனால் தோற்றோம் என்று யாருமே யோசிக்கவில்லை, யோசிக்கவும் தயாராக இல்லை. நம்பி வந்தோமே.. இப்படி நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டாரே என்றுதான் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்புகிறார்களாம்.
அதிமுகவை ஒதுக்கி ஓரம் கட்ட பாஜக முடிவு.. செல்வாக்கை நிரூபிக்க களம் இறங்குகிறது!
இசக்கி சுப்பையா
இதன் காரணமாகவே அமமுக அமைப்பு செயலாளர் ஆதித்தன், அதை தொடர்ந்து அண்ணாமலை போன்றோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தாய்க்கழகத்தில் இணைந்துவிட்டனர். அடுத்ததாக இசக்கி சுப்பையா வரிசையில் உள்ளார். தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் பெயர்களும் அடிபடுகிறது.
செல்வாக்கு
இப்போது விஷயம் என்னவென்றால், அதிமுகவின் குறி தென்மாவட்டத்தை நோக்கி பாய்ந்துள்ளது. அதாவது இந்த தென் மாநிலங்களில்தான் அமமுகவின் செல்வாக்கு அதிகம் இருப்பதாக நம்பப்பட்டது. இதை பார்த்துதான் எதிர்தரப்பும் நடுக்கம் கொண்டது.
அசைன்மென்ட்
இப்போது மொத்தமாகவே மண்ணை கவ்வியதால், அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கான அசைன்மென்ட் அதிமுகவின் மூத்த தலையான தளவாய் சுந்தரத்திடம்தான் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ன செய்வீங்களோ தெரியாது, தென்மாவட்டங்களில் உள்ள அமமுக கூடாரங்களை காலி செய்ய வேண்டும் என்ற பொறுப்பை தந்ததுடன் அதற்கான நாளையும் குறித்துள்ளதாம் அதிமுக.
தாய்க்கழகம்
கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்படி மிக தீவிரமாக இறங்கி வேலை பார்த்து வருகிறாராம் தளவாய் சுந்தரம். இன்னொரு ஹாட் நியூஸ் என்னவென்றால், வருகிற 12-ம் தேதி, அமமுகவில் இருந்த நிறைய பேர் அதிமுகவுக்கு தளவாய் சுந்தரம் மூலமாக தாய்க்கழகத்தில் இணைய போவதாகவும் சொல்லப்படுகிறது.
கோபம்
ஆனால் இவ்வளவு நடந்தும் தினகரன் எந்தவித சலனத்தையும், கோபத்தையும், வெறுப்பையும், காட்டவில்லை. காரணம், இன்னும் அவர் தேர்தல் தோல்வி ஷாக்கில் இருந்தே மீளவில்லையாம். ஏன் தோற்றோம், எப்படி தோற்றோம் என்ற சுயபரிசோதனைக்குள் முடங்கி உள்ளாராம்!