"நோ சான்ஸ்".. விஜயபாஸ்கரை மாற்றும் திட்டமே இல்லையாம்.. வதந்திகளுக்கு ஆப்பு வைக்கும் எடப்பாடியார்..!
தமிழக அமைச்சரவையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என்று கூறப்படுகிறது
சென்னை: என்ன நடந்தாலும் சரி, யார் எதிர்த்தாலும் சரி, அமைச்சர் விஜயபாஸ்கரை மாற்றும் எண்ணமே இல்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.. சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்படுவாரா என்று றெக்கை கட்டிக் கொண்டு பறக்கும் வதந்திகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
ஜெயலலிதா மறைந்தபிறகு குட்கா விவகாரம் தலைதூக்கியபோதே, விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பிடுங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
"குட்கா அமைச்சர்" என்றே விமர்சிக்கவும்பட்டார்.. சிபிஐ விசாரணை வரை நடந்து முடிந்தது. ஒவ்வொரு முறை விசாரணையில் ஆஜராகும்போதும், பதவியை முதல்வர் பறித்துவிடுவாரோ என்ற எதிர்பார்ப்பும் ஏராளமாக எழுந்தது.
வாரிசே இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா.. உயிலும் எழுதவில்லை.. தீபா வாரிசு கிடையாது- புகழேந்தி
செயல்பாடுகள்
ஆனால் எதிர்கட்சிகளின் எல்லா எதிர்பார்ப்பும் ஒன்றுமில்லாமல் புஸ்ஸென்று போய்விட்டது.. இதற்கு பிறகு கொரோனா சமயத்தில் விஜயபாஸ்கரின் செயல்பாடு மக்களால் உற்று கவனிக்கப்பட்டது.. பெரும் பாராட்டையும் பெற்றது.. ஒரு நிமிஷம்கூட ஓய்வில்லாமல் விஜயபாஸ்கர் தொற்றை ஒழிக்க அதிகமாகவே மெனக்கெட்டார்.. மிக சிறப்பாகவே செயல்பட்டார்.. இவரது புகழ் எட்டுதிக்கும் பரவி குட்கா ஊழல் விவகாரத்தையே மறைத்துவிடும் அளவுக்கு சென்றது!
பீலா ராஜேஷ்
இந்த சமயத்தில்தான் பீலா ராஜேஷ் முன்னிறுத்தப்பட்டார்.. விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்படுகிறார் என்ற தகவல்கள் வலுவாகி கொண்டே வந்தது.. அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதை பற்றி செய்தியாளர்கள் வெளிப்படையாக கேட்டபோதும், இந்த குற்றச்சாட்டை வலுவாகவே மறுத்தார்.. ஆனால் விஜயபாஸ்கர் சில நாட்கள் ஒதுங்கி இருந்ததற்கான உண்மை காரணம் வெளிப்படையாக சொல்லப்படவில்லை.
ஜெ.ராதாகிருஷ்ணன்
இதற்கு பிறகுதான் பீலா ராஜேஷின் குளறுபடிகள் பேட்டிகள், தவறான புள்ளிவிவரங்கள் எழுந்து பிரச்சனை இன்னும் வெடித்தது.. இதனிடையே கொரோனா தொற்று தலைதூக்கவும், ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
சலசலப்பு
பீலாவின் பொறுப்பு பறிக்கப்பட்டது மிகப்பெரிய திருப்பத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.. அப்போதே எதிர்கட்சிகள் விஜயபாஸ்கரும் மாற்றப்படுவாரா என்ற கேள்வியை முன்வைத்தனர்.. கொங்கு மண்டல ஈஸ்வரனும் இது சம்பந்தமாக ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. "சுகாதாரத்துறை அமைச்சரும் செயலாளரும் இரவு பகல் பார்க்காமல் வெகு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொன்னர்கள், உலகத்திலேயே தமிழக சுகாதாரத்துறை தான் சிறப்பாக செயல்படுகிறது என்று பிரச்சாரமும் செய்தார்கள்.
சுகாதாரத்துறை
இன்றைக்கு கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான பின்னால் சுகாதாரத்துறை செயலாளர் செயல்பாடுகள் சரி இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்டவர் தான் சுகாதாரத்துறை செயலாளர். அரசின் தோல்வி தான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா?" என்று கேட்டிருந்தார்.
ஸ்டாலின் அறிக்கை
"அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா? அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியிருந்தார். ஆனால் அமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.. அமைச்சரவை மாற்றம் செய்தால், அதன்மூலம் அரசியல் செய்யலாம் என்று காத்து கொண்டிருந்தவர்களுக்கும் அரசு நச்சென முடிவை தெரியப்படுத்தி, தெளியப்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. ஆக.. விஜயபாஸ்கருக்கு தொடர்ந்து ஜெயம்தான்!!