சென்னை ஏர்போர்ட்டில் நடந்த "அந்த சம்பவம்".. மத்திய அமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை?
வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி தர பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: நேற்றில் இருந்து ஜிகே வாசன் சம்பந்தப்பட்ட நியூஸ் ஒன்று தமிழக அரசியலில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.. விரைவில் மத்திய அமைச்சர் பதவி வாசனை தேடி வரப்போகிறதாம்.. இதற்கு காரணம் சென்னை ஏர்போர்ட்டில் நடந்த "அந்த சம்பவம்"தான் என்றும் சொல்லப்படுகிறது.
ஜிகே வாசன் மிக நல்ல மனிதர்.. பெரிதாக சர்ச்சையில் சிக்காதவர்... அநாகரீகமாக பேசாதவர் என நல்ல குணங்களுடன் இருப்பவர்... மூப்பனாரின் வளர்ப்பு அப்படி!
எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் டிமாண்ட் செய்ததே கிடையாது.. நெருக்கடியும் தர மாட்டார்.. தனிப்பட்ட மரியாதை இவருக்கு எல்லா கட்சியினரிடமும் உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை!
தமாகா
எல்லாக் கட்சியிலும் வாசனை விரும்புபவர்கள் உள்ளனர். அது திமுகவாக இருந்தாலும் காங்கிரஸாகவே இருந்தாலும் சரி, வாசனுக்கென்று ஒரு சாப்ட் கார்னர் இருக்கவே செய்கிறது. அதனால்தான் தமாகா தொடங்கியபோது முக்கிய நிர்வாகிகள் வாசனை நம்பி வந்தனர். தன் கட்சி ரீதியான தோல்வியை கண்டாலும் வாசன் அரசியல் பாகுபாடின்றி தலைவர்களுக்கு தரும் மரியாதை அனைவரையும் ஈர்த்து வருகிறது.
ஏர்போர்ட்
சில மாதங்களுக்கு முன்புகூட, பிரதமரை வழியனுப்ப ஜிகே வாசன் சென்னை ஏர்போர்ட் வந்தபோது மோடியால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.. மற்றவர்களை விட்டு விட்டு வாசனிடம் தனிப்பட்ட பாசத்தைக் காட்டினார் மோடி... பாஜகவினரே இதை எதிர்பார்க்கலை. டெல்லிக்கும் வரவழைத்து பிரதமர் பேசினார்.ஆனால் அப்போதுகூட தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று வாசன் கேட்கவே இல்லை.
நியமனம்?
தமிழக கோரிக்கைகள் பற்றி மட்டுமே சொல்லிவிட்டு வந்ததுதான் பிரதமருக்கு வாசனை ரொம்பவும் பிடித்து போயிருக்கலாம் என்று அப்போதே முணுமுணுக்கப்பட்டது.. அதனால்தான் தமிழிசைக்கு பிறகு, இவரை பாஜக தலைமையாக நியமனம் செய்வார்களோ என்றுகூட ஒரு தகவல் கசிந்தது. ஏனென்றால், பாஜகவை பொறுத்தவரை, மக்களிடம் பிரபலமும், மரியாதையும் பெற்றவரை முன்னிறுத்தியே தங்களை காரியங்களை சாதித்து கொள்வதேயே வழக்கமாக வைத்து வருகிறது.. வாஜ்பாய் காலத்தில் இருந்தே அப்படிதான்.. ஆனால், ஏனோ, வாசனுக்கு தலைமை பதவி தரப்படவில்லை..
நன்மதிப்பு
இப்போது மத்திய அமைச்சர் பதவிக்காக அவர் பெயர் அடிபடுகிறது.. கொரோனாவால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி நாடாளுமன்றம் கூடும்போது மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறாராம்.. அப்படி மாற்றியமைக்கப்படும் பட்சத்தில், அமைச்சரவையில், சமீபத்தில் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை இணைத்துக்கொள்ளவும் மோடி முடிவு செய்திருக்கிறாராம்.
பாஜக
இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.. ஆனால் எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்து வரும் வாசன், மத்திய அமைச்சர் பதவி என்றதும் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை போல தெரிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவில் வாசன் இணைந்துவிட்டால், நிச்சயம் இந்த மத்திய அமைச்சரவை பதவியை லட்டு போல தூக்கி தர பாஜக தலைமை காத்திருக்கிறதாம்.
நன்மதிப்பு
எனினும் வாசன் தரப்போ, இதை முற்றிலும் மறுக்கிறது.. பதவிக்காக கட்சியை கொண்டு போய் பாஜகவில் வாசன் அடகு வைக்க மாட்டார் என்று உறுதியாக சொல்கிறார்கள்... இதில் எது நடக்கும் என தெரியவில்லை.. ஆனால், மோடி, அமித்ஷாவின் மனசில் வாசன் நிறையவே இடம் பெற்றுவிட்டார்!