சிங்கமா வாழ்ந்துட்டோம்.. சிங்கிளாவே நிற்போம்.. அதிமுக தலைமையை நெருக்கும் மா.செக்கள்!
சென்னை: பட்டதே போதும்.. இனிமேல் நாம தனியாவே நின்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் குரல் எழுப்ப தொடங்கி உள்ளார்களாம்!
கூட்டணி இல்லாமல் இங்கு எந்தக் கட்சியும் பிழைக்க முடியாது. இதுதான் எதார்த்த நிலை. திமுகவோ, அதிமுகவோ எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துத்தான் எந்த தேர்தலையும் சந்திக்க வேண்டிய நிலைமையில் உள்ளது.
தனியாக நின்று தேர்தலை சந்திக்க பிரதான அரசியல் கட்சிகள் ஏன் தயங்குகின்றன என்று தெரியவில்லை. அதேசமயம், மக்கள் ஒரே கட்சிக்கு தங்கள் ஆதரவை தர தயாராக இல்லையா என்பதும் புரியவில்லை.
திமுக
இப்படித்தான் அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்தன. ஒன்று ஜெயித்துவிட்டது, ஒன்று மண்ணை கவ்வி விட்டது. அதனால் கூட்டணி என்பதையும் தாண்டி, எந்த கட்சியுடன் கூட்டணி என்பதுதான் இங்கு மக்களால் கூர்ந்து பார்க்கப்படுகிறது.
அதிருப்திகள்
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோற்க நிறைய காரணம் உள்ளது. மோடி எதிர்ப்பு அலை, அதிமுக மீதான அதிருப்தி, பொருந்தா கூட்டணி, தேமுகவின் பேரம், பாமகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்று பல காரணங்கள் உள்ளன.
சிவி சண்முகம்
இதனை அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர் உணர்ந்துள்ளனர். எதனால் தோற்றோம் என்று கேட்டபோது, ஏராளமான நிர்வாகிகள் சொன்னது, பாஜகவுடனான கூட்டணியைதான். அமைச்சர் சிவி சண்முகம் இதைபற்றி சொன்ன அதிருப்தி கருத்து இன்னும் சர்ச்சையாகவே உள்ளது. இதுபோக, தொண்டர்களும் வெளிப்படையாகவே தோல்வி குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.
மாவட்ட செயலாளர்கள்
இப்போது விஷயம் என்னவென்றால், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. இந்த தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடலாம் என்று மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளார்களாம். ஒருமுறை தோற்றது போதும்.. இனி வேண்டாம்.. தனித்தே போட்டியிட்டு, விட்டதை பிடிப்போம் என்கிறார்களாம்.
திமுகவுக்கு சாதகம்
அது மட்டுமில்லை.. திரும்பவும் பாஜகவுடன் சேர்ந்தால், நிர்ப்பந்தம் காரணமாக, தர்மசங்கடம் காரணமாக முக்கியமான மாநகராட்சி, பேரூராட்சிகளை விட்டுதர வேண்டி வரும். அப்படி விட்டுக் கொடுத்துவிட்டால், அது திமுகவுக்கே சாதகமாக போய்விடும் என்று காரணமும் சொல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
தோல்வி
அதனால் அதிமுக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுமா, திரும்பவும் பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என்பது தெரியவில்லை. ஏற்கனவே பாஜகவும் அதிமுக தரப்பு மீது கோபமாக உள்ளது. தேர்தல் தோல்வி சம்பந்தமாக நிறைய முறை விளக்கம் அளித்தும் பாஜக தலைமை அதனை ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனை சரிக்கட்டவும், மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் அதிமுகவின் தேவைகளாக இருப்பதால், ஒருவேளை பாஜகவை இந்த முறையும் கூட்டணிக்கு சேர்த்து கொள்ளுமா என்று தெரியவில்லை.
பலம் காட்ட முடிவு
ஆனால், உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, உள்ளூரில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ அவர்களுக்குதான் வெற்றி வாய்ப்பு. கட்சி பேதமெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. எந்த வகையிலும் அது எடுபடாது என்பதால் தனித்து போட்டியிட்டு, பலத்தை காட்டவும் அதிமுக யோசித்து வருகிறதாம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!