கலைவாணனுக்கு கிடைத்த "பூஸ்ட்".. திருவாரூர் பிரமாண்ட வெற்றியின் ரகசியம் இதுதானாமே!
பூண்டி கலைவாணன் வெற்றி பெற அமைச்சர் காமராஜ் உதவியதாக கூறப்படுகிறது.
சென்னை: தேர்தல் ரிசல்ட் வந்து இத்தனை நாள் ஆகியும் இன்னும் அந்த பரபரப்பு குறையவில்லை. அதேபோல ஏன் தோற்றோம், என்னாச்சு என்ற குழப்பமும் தீரவல்லை. இதனால் நாளுக்கு ஒரு தகவல்கள் தேர்தல் வெற்றி பற்றி வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், அதிமுக பிரமுகர் செய்த உதவியால் திமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்றுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக திருவாரூரில் தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி அவரது தொகுதியை முற்றும் அறிந்தவர்தான் பூண்டி கலைவாணன். திமுகவில் அனுபவமிக்கவர்.
கருணாநிதி, அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அடிப்படை காரணம் பூண்டி கலைவாணன் என்றும் பலமுறை வெளிப்படையாகவே பேசப்பட்டது.
ஸ்டாலின்
அதைதவிர கருணாநிதியின் குடும்பத்தின் மீது பூண்டி கலைவாணன் ஏகப்பட்ட விசுவாசத்தை வைத்திருப்பவர். அதனால்தான் இடைத்தேர்தலில் கருணாநிதி இடத்தில் கலைவாணனை வைத்து அழகு பார்த்தார் ஸ்டாலின்.
ஜீவானந்தம்
அதிமுக வேட்பாளராக ஜீவானந்தம் போட்டியிட்டார். இவர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் இல்லை. இதுவே இவருக்கு பெரிய மைனசாக இருந்தது. அதேபோல, அமமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் எஸ்.காமராஜ். நல்ல மனிதர். அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்.
காமராஜ்
மதுரையில் எப்படி அழகிரியோ, அப்படிதான் திருவாரூரிலும் காமராஜ், எளிமையாக தொண்டர்களிடம் பழகுவார். அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர். கடுமையான உழைப்பாளி. தொழிலதிபரும்கூட. மாவட்ட செயலாளராக 15 வருஷத்துக்கும் மேலாக இருந்தவர். தினகரனின் சொந்த மாவட்டம் என்பதால் எப்படியோ அமமுகவுக்கும், திமுகவுக்கும்தான் பெரும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வித்தியாசம்
ஆனால் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றுவிட்டார். அவர் 1,17,616 வாக்குகளும், அதிமுக ஜீவானந்தம் 53,045 வாக்குகளும், அமமுக காமராஜ் 19061 வாக்குகளும் பெற்றனர். அதாவது பூண்டி கலைவாணன் 64571 வாக்கு வாத்தியாசத்தை பெற்றிருந்தார்.
உள்ளடிவேலை
கலைஞரின் சொந்த தொகுதி, வேட்பாளர் மீதான தனிப்பட்ட மதிப்பு, மத்திய-மாநில அரசுகளின் மீதான அதிருப்தி காரணங்களால் திமுக வெற்றி பெற்றிருப்பதை மறுக்க முடியாது! அதேசமயம் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது உள்ளடி வேலைதான். அந்த உள்ளடி வேலை திமுகவிலேயே இருந்தது ஓரளவு உண்மைதான். ஆனால் அதிகபட்சம் இருந்தது அதிமுகவில்தான்!
நன்னிலம்
ஏனெனில் பூண்டி கலைவாணனை வெற்றி பெற வைக்க மறைமுகமாக பாடுபட்டதே அதிமுகவைச் சேர்ந்த அந்த உள்ளூர் பிரமாண்டம்தானாம். இதற்கு காரணம், அன்று நன்னிலம் தொகுதியில் அந்த பிரமாண்டத்தை வெற்றி பெற வைத்து அமைச்சராகும் அளவுக்கு உயர்த்தியதே பூண்டி கலைவாணன்தானாம்! இந்த நன்றி விசுவாசத்தை காட்டவே, அவருக்காக களவேலைகளில் இறங்கினாராம் பிரமாண்டம்.
நட்பு
கலைவாணன் வெற்றிக்காக சொந்த கட்சி வேட்பாளரைகூட அவர் கவனிக்கவில்லையாம் . அது மட்டுமில்லை.. பெரிதும் எதிர்பார்பார்க்கப்பட்ட அமமுக வெறும் 1874 வாக்குகளை பெற வைக்கும் அளவுக்கு பிரமாண்டத்தின் பங்கு இதில் இருக்கவே செய்தது என்றும் கூறப்படுகிறது. நட்புன்னா சும்மாவா!