"சின்னம்மா" வர போகிறார்.. "அந்த 6 பேர்".. செம குஷியாமே.. எடப்பாடியாருக்கு எகிறும் டென்ஷன்!
சசிகலாவை வரவேற்க ஆறு அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்களாம்
சென்னை: சசிகலா வருகையையொட்டி சில அமைச்சர்கள் குதூகலமாகி உள்ளனர்.. அதிலும் அந்த 6 அமைச்சர்கள், இந்த பக்கமா, அந்த பக்கமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்களாம்..!
சசிகலா ரிலீஸ் பற்றின பேச்சு எழுந்தபோதே, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், ராஜேந்திர பாலாஜியும் முட்டு கொடுத்து பேச ஆரம்பித்துவிட்டனர்..
சசிகலாவுக்கு ஆதரவு அமைச்சர்கள் என்று சொல்லப்படும், செல்லூர் ராஜூ, ஓஎஸ் மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆகியோரே அமைதியாக இருந்தபோது, இவர்கள் 2 பேரும் பேசியதை பார்த்து முதல்வர் தரப்பு ஷாக் ஆனதாகவும் , கண்டித்ததாகவும் சொல்லப்பட்டது.
மனு
இதனிடையே சசிகலாவை ஜெயிலில் போய் சந்திக்க 2 பேர் மனு தந்திருந்த விஷயமும் எடப்பாடியார் காதுக்கு போனது. அதனால்தான், யாரெல்லாம் சசிகலாவால் கடந்த காலங்களில் பயன்பெற்றவர்கள், யாரெல்லாம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள் என்ற லிஸ்ட் எடுக்கும்படியும் மறைமுகமாக எடப்பாடியார் தரப்பு உத்தரவிட்டிருந்தது.. மேலும் யாரும் சசிகலாவை பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.
அறிவிப்பு
இப்போது சசிகலாவுக்கு உடம்பு சரியில்லாமல் உள்ளது.. சிகிச்சையில் இருக்கிறார்.. அவர் 27-ம் தேதி விடுதலையாக உள்ளதாக ஏற்கனவே சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.. விடுதலை தேதி அறிவித்துவிட்டால், சிறைவிதிப்படி, யாராக இருந்தாலும் அவர்களை ஒருநாள்கூட கூடுதலாக ஜெயிலுக்குள் வைத்திருக்க முடியாதாம்.. எனவே 27-ம் தேதி சசிகலா விடுதலையாக கூடும் என்ற செய்தி பரபரத்து வருகிறது.
வரவேற்பு
அன்றைய நாளில் விடுதலை என்பதால், ஒருசிலர் அதற்கான ஏற்பாட்டை ஜரூராக செய்யவும் திட்டமிட்டு வருகிறார்களாம்.. அதிமுகவைச் சேர்ந்த கொங்கு பகுதி எம்எல்ஏ ஒருவர் சசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் ஒன்றை கொடுக்க தயார் செய்து வருகிறாராம்... அவர் மட்டுமல்ல, மேலும் 3 அமைச்சர்கள் சசிகலாவை வரவேற்கவும் தயாராக இருக்கிறார்களாம்.. அதுமட்டுமல்ல, 6 முக்கிய அமைச்சர்கள் இந்த பக்கமா, அந்த பக்கமா என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.. இந்த 6 பேர் யார் என்று தெரியவில்லை.
கண்காணிப்பு
27-ம்தேதி, ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடியார் திறக்க காரணம், சசிகலாவுக்கு மீடியா வெளிச்சம் அதிகமாக விழுந்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமில்லை, யாரெல்லாம் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள போகிறார்கள்? யாரெல்லாம் சசிகலாவை வரவேற்க யாரெல்லாம் போகிறார்கள்? யாரெல்லாம் ஸ்லீப்பர் செல்கள் என்பதை தெரிந்து அப்பட்டமாக தெரிந்து கொள்வதற்காகத்தான், அன்றைய தேதியை முதல்வர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது 6 பேர் வரவேற்க தயாராகிறார்கள் என்றால், யார் அந்த 6 பேராக இருக்கும்?!!