அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லை, முதியோர்கள் அதிகம்.. தென் மாவட்டங்களை எப்படி காப்பாற்றப் போகிறோம்?
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய சுகாதார ஆபத்து என்று எச்சரிக்கின்றனர் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள்
உலகம் முழுக்கவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது, அப்படி இருக்கும்போது, தனிப்பட்ட முறையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு என்ன சுகாதார அவசர நிலை என்ற கேள்வி எழலாம்.
தமிழகத்தின் பிற மண்டலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தின் தென் மண்டலம் வேறு மாதிரியான மருத்துவ கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்ற அடிப்படை புரிந்தால் இந்த ஆபத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
பான் மசாலா தேடி தப்பி ஓடிய கொரோனா நோயாளி... தனிமைப்படுத்தப்பட்ட நண்பர் குடும்பம்!!
மதுரை மருத்துவ கட்டமைப்பு
பொதுவாக மதுரை மாவட்டத்திற்கு தெற்கே உள்ள, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மாவட்டங்கள் என்று அழைப்பது வழக்கம். இதில், மதுரை மட்டும்தான் முழு மருத்துவ கட்டமைப்பு கொண்ட நகரம் என்று அழைக்கலாம். என்னதான், நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் ஆகியவை மாநகராட்சிகளாக இருந்தாலும், மருத்துவ கட்டமைப்பு என்பது மிக மோசமான நிலையில் உள்ளது. மதுரையின் மருத்துவ கட்டமைப்புக்கு முக்கியகாரணம் ராஜாஜி பொது மருத்துவமனை போன்ற உயர்தர அரசு மருத்துவமனை மட்டுமின்றி, அப்பல்லோ, மீனாட்சி மிஷன் போன்ற புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளின் கிளைகள் அங்கு இருப்பதும்தான்.
தென் மாவட்ட நிலைமை மோசம்
இந்த மருத்துவ கட்டமைப்பு வசதிகளை, அருகே உள்ள விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஓரளவுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்களில் நிலைமை இந்த விஷயத்தில் ரொம்ப மோசம். நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஹைகிரவுண்ட் பொது மருத்துவமனை வெகுகாலமாக உயர்தர சிகிச்சைக்கு பெயர் பெற்றது. சமீபகாலமாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனை, நல்ல சிகிச்சைக்காக மக்களிடம் பெயர் பெற்று வருகிறது. ஆனால் இந்த இரண்டு பொது மருத்துவமனைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்த நான்கு மாவட்டங்களிலும் புகழ்பெற்ற மருத்துவமனைகள் என்று எதுவும் இல்லை.
படுக்கை வசதி ரொம்ப குறைவு
இந்த மாவட்டங்களில், ஒரு சில தனியார் மருத்துவமனைகள், அந்தந்த வட்டாரத்தில், ஓரளவு, பெயர் பெற்று விளங்கினாலும் கூட, அவற்றில் உள்ள படுக்கை வசதியை, நோய் பரவலோடு ஒப்பிட்டால், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. நோய் பரவல் படிப்படியாக அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில், இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கான படுக்கை வசதியை தர முடியாது என்பதுதான் யதார்த்தம்.
தென் மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பு இல்லை
இரண்டு வருடங்களுக்கு முன்பு, தான் சந்தித்த ஒரு அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார் அந்த வாசகர். நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில், மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஒருவரை, சென்னைக்கு அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியை தேடியபோது வென்டிலேட்டர் அதாவது செயற்கை சுவாசம் வசதிகொண்ட ஆம்புலன்ஸ் எதுவுமே அங்கே கிடைக்கவில்லையாம். மதுரையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் நெல்லை வந்து, அந்த நோயாளியை அழைத்து கொண்டு மறுபடி மதுரை மார்க்கமாக சென்னை செல்ல வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு காலதாமதம் இது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நிலையில்தான் உள்ளது, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களின் மருத்துவ கட்டமைப்பு. சாதாரண பிரச்சினைக்கு மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டிய நிலையில் இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு இது போன்ற உலக பெருந்தொற்று காலத்தின் நிலைமை என்னவாகும் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
தென் மாவட்டங்களில் முதியோர் அதிகம்
மற்றொரு பக்கம், தென்மாவட்டங்கள் என்பது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வேறொரு வகையில் தனித்துவம் பெற்றது. அது என்னவென்றால் அங்கு தொழில் வளர்ச்சி என்பது மிகவும் குறைவு. எனவே, கோவை, திருப்பூர் போன்ற மேற்கு மண்டலங்களுக்கு அல்லது சென்னை போன்ற நகரங்களுக்கு இளைஞர்கள் வேலை தேடி செல்கிறார்கள். எனவே, பெரும்பாலும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் முதியோர்கள்தான் கிராமங்களில் இருக்கிறார்கள். ஒரு ஊரில் ஆயிரம் வீடு இருந்தால் அதில் 500 வீடு காலியாக இருக்கும். மிச்சமுள்ள 500 வீடுகளிலும் முதிய தம்பதிகள்தான் இருப்பார்கள். அவர்களுக்கான மருந்துகள் கூட நகரங்களிலிருந்து அவர்களின் குழந்தைகளால், கூரியரில் அனுப்பி வைக்க கூடியதாகத்தான் இருக்கும்.
பாதுகாக்க வேண்டியது அவசியம்
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, முதியோர்களை பட்டாம்பூச்சி போல பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுரை உலக சுகாதார அமைப்பாலும், மத்திய, மாநில அரசுகளாலும், முன்வைக்கப்படுகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் முதியோர் அதிகம். மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறைவு. அப்படி இருக்கும்போது முதியோரை பாதுகாப்பது எப்படி? எனவே தமிழக அரசு உடனடியாக தற்காலிகமாக தென்மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சிறு நகரங்களிலும் பரவுகிறது
உதாரணத்திற்கு திருநெல்வேலி மாவட்டமாக இருந்தால், திசையன்விளை, வள்ளியூர், கூடங்குளம், நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டமாக இருந்தால், திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், ஆறுமுகநேரி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், எட்டையபுரம் உள்ளிட்ட பேரூராட்சி அல்லது சிறு நகர பகுதிகளுக்கும் கூட கவனம் தேவைப்படுகிறது. சமீபகாலமாக அங்கெல்லாம் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாம் குறிப்பிட்ட இந்த சிற்றூர்கள், அருகே உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கான சந்தை தேவை மற்றும் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யக்கூடிய இடங்கள். கிராம மக்கள் இதுபோன்ற சிறு நகரங்களுக்கு சென்றுதான் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நகரங்களில் நோய் பரவல் ஏற்படுவது என்பது கிராமங்களுக்கும் அவற்றைப் பரப்பி விடும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இவை அனைத்தையும், மருத்துவர்களும், தமிழக அரசும் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால்தான், தென் மாவட்டங்களை காப்பாற்ற முடியும்.