கியா போல்தாஹே ரயில்வே ஜி... உங்க யோசனையில்... கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே!
இந்தியில் பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது
Recommended Video
சென்னை: பிராந்திய மொழிகளில் பேசுவது புரியவில்லை. அதனால் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே ஒரு உத்தரவு போட்டுள்ளது. இது பெரும் குழப்பத்தையும், கடுப்பையும் கொடுத்துள்ளது.
மத்திய அரசுக்கு எப்போதுதான் இந்தியாவின் இயல்பு நிலை புரியுமோ என்ற ஆதங்கமும், எரிச்சலும் கூடவே சேர்ந்து வருகிறது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவே பொதுமக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
அதாவது மொழி தெரியாத மாநிலத்துக்கு ஒருவரை வேலையில் நியமிப்பதே முதல் தவறு. அப்படி நியமிக்கப்பட்டவருக்கு வசதியாக, உள்ளூர் மொழியைப் பேசாதீங்க என்று கூறுவது 2வது தவறு. அதை விட பெரிய அபத்தம்.. உள்ளூர் மொழியைக் கத்துக்கப்பா என்று வேலையில் சேர்ந்த வெளி மாநிலத்தவருக்கு உத்தரவிடாமல், அவருக்கு வசதியாக உள்ளூர் மொழியை காலி செய்யத் துடிப்பது உலக மகா அபத்தமான செயலாக உள்ளது.
தமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!
இந்தி தேவையா?
வட மாநிலங்களுக்கு படிக்க, வேலைக்குப் போனால் உங்களுக்கு இந்தி தெரியணும் இல்லையா. அதனால இந்தி கத்துக்கங்க. அதற்காகத்தான் இந்தி கத்துக்கச் சொல்றோம், கொண்டு வர்றோம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. லாஜிக் இருக்குன்னு வச்சுக்குவோம். இப்ப பீகாரைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டில், ஏதாவது ஒரு கிராமத்துப் பக்கம் வேலையில் நியமிக்கப்படுகிறார். அவருக்கு இப்போது இந்தி தேவையா அல்லது தமிழ் தேவையா ?
கேட்-கீப்பர்
சரி அதை விடுங்க. தமிழ்நாட்டில் நகர்ப்புறத்தில் ஒருவரை வேலைக்குப் போடுகிறாங்கன்னு வச்சுக்கலாம். மதுரைப் பக்கமோ, கோவைப் பக்கமோ போடுறாங்க. அவருக்கும் கூட தமிழ் தெரிந்திருக்க வேண்டாமா இல்லையா.. ரயில் வருவதை கேட் கீப்பருக்குச் சொல்லும்போது அவருக்கு அது புரிய வேண்டாமா.. இல்லை, எனக்கு இந்தியில்தான் சொல்லத் தெரியும்.. நீதான் புரிஞ்சுக்கணும் என்று கூறினால் அது உலக மகா மடத்தனம் இல்லையா.
தமிழ் மொழி
லக்னோவில் வேலை பார்த்தால் இந்தி தெரியணும். வாஸ்தவம்தான். பாட்னாவில் வேலையா இந்தி தெரிஞ்சிருக்கணும். அங்கு வேலைக்கு ஒரு தமிழ்நாட்டுக்காரரை நியமித்தால் அவருக்கு வசதியாக எல்லோரும் இந்தி பேசாதீங்க, தமிழிலேயே பேசுங்கன்னு உத்தரவு போட்டா அங்குள்ளவர்கள் வெத்திலை பாக்கு வைத்து வரவேற்பார்களா இல்லை அடிக்க வருவார்களா.. இதெல்லாம் மத்திய அரசு யோசிக்காதா இல்லை இந்த ரயில்வேக்குத்தான் இதையெல்லாம் யோசிக்கும் திறமை இல்லாமல் போயிருச்சா.
பிராந்திய மொழி
எந்த ஊரில் வேலை பார்க்கிறோமோ அந்த ஊர் பண்பாடு, கலாச்சாரம், மொழி இதைத் தெரிந்து கொள்ளாமல் நமக்கேற்ப அந்த ஊரையே மாற்ற முயல்வது எத்தனை பெரிய முட்டாள்தனம், அயோக்கியத்தனம் என்பது புரிய வேண்டாமா. மத்திய அரசு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழைப் பிராந்திய மொழி என்று சொல்லியிருப்பது உண்மையிலேயே சட்ட விரோதமானது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. இந்தியும் ஒரு பிராந்திய மொழிதான்.. அது தேசிய மொழி அல்ல.
காங்கிரஸ்
இப்படி வலிக்க வலிக்க வந்து தமிழ்நாட்டுக்காரர்களை கோபப்படுத்திக் கொண்டே இருந்தால், சீண்டிக் கொண்டே இருந்தால், தேவையில்லாமல் சம்பந்தம் இல்லாமல் மொழிகளையும், கலாச்சாரத்தையும் திணித்தால் நிச்சயம் அந்தக் கோபம் எல்லாம் மத்திய பாஜக மீதுதான் வந்து விடியும். இந்த விஷயத்தில் காங்கிரஸும் உறுதியோடு செயல்பட்டு இந்தித் திணிப்பை தடுக்காவிட்டால் அந்தக் கட்சிக்கும் சேர்த்து வச்சு மக்கள் தேர்தலில் செய்து விடுவார்கள் என்பதே நிதர்சனம்.