குட் நியூஸ்.. நாடு முழுக்க 2 வாரங்கள் முன்பே கால் வைத்த தென் மேற்கு பருவமழை.. நல்ல விளைச்சல் கேரண்டி
சென்னை: தென் மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 2 வாரங்களுக்கு முன்பாகவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளை அடைந்துள்ளது. இதுவரை, சுமார் 21 சதவீதம் அதிகம் மழைப் பொழிந்துள்ளது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி, மற்றும் பொருளாதாரம், வேலை வாய்ப்புக்கு இது மிகவும் நல்ல செய்தியாகும்.
ஆம்.. தென்மேற்கு பருவமழை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, முழு நாட்டிலும் கால் பதித்துவிட்டது. தென்மேற்கு பருவமழை வெள்ளிக்கிழமையான நேற்று ராஜஸ்தானை அடைந்தது.
வழக்கமாக ஜூலை 8ம் தேதிதான், ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை காலடி எடுத்து வைக்கும். ஆனால், சும்ார், இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருவமழை பொழியத் தொடங்கிவிட்டதால் ராஜஸ்தான் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த மாவட்டங்களில் எல்லாம் இடி மின்னலோடு மழை வெளுக்கப் போகுது - எச்சரிக்கும் வானிலை
உபரி தொழிலாளர்கள்
மொத்த நாட்டிற்கும் இது ஒரு நல்ல செய்தி. கொரோனா காரணமாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். எனவே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அவர்களுக்கு பணிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பருவமழை விவசாயத் துறைக்கு ஊக்கம் கொடுப்பதால், விவசாயம் செய்ய தொழிலாளர்கள் கிடைப்பதோடு, குறைந்த கூலி மற்றும் செலவில், விவசாயிகள் அதிகம் லாபம் சம்பாதிக்கலாம். அவ்வாறு உள்ளீடு விலை குறையும்போது, உணவு தானிய விலைவாசியும் குறையும்.
2 வாரங்களுக்கு முன்பே அசத்தல்
தென்மேற்கு பருவமழை இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இந்தியா முழுக்க விளாசத் தொடங்கியுள்ளது. வழக்கமாக இந்த பருவமழை ஜூன் 1ம் தேதிக்குள் கேரளாவை அடைகிறது, அங்கிருந்து ராஜஸ்தானின் ஸ்ரீகங்கநகரை வந்து அடைய 45 நாட்கள் ஆகும். ஜூலை 8 ஆம் தேதி, இந்த பருவமழை ராஜஸ்தானை அடையும். ஆனால் இந்த முறை 2 வாரங்கள் முன்னதாக. ஜூன் 26 அன்று ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க நல்ல மழை
இந்த முறை நாடு முழுக்க நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இப்போது கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், மேகாலயா, அசாம் மற்றும் சிக்கிம் ஆகிய நாடுகளுக்கு அடுத்த சில நாட்களில் பலத்த மழை பெய்யும். பீகார், உத்தரபிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர, கிழக்கு உத்தரப்பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், கர்நாடகா, லட்சத்தீவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
21 சதவீதம் அதிக மழை
இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, நாடு தற்போது நல்ல பருவமழையை அனுபவித்து வருகிறது. ஜூன் 25க்குள், வழக்கத்தைவிட 21 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இது ஒரு நல்ல செய்தி, ஏனெனில் நாட்டின் விவசாயத் துறை முழுக்க மழைக்காலத்தை சார்ந்துள்ளது. நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்துறையை சார்ந்து இருப்பதால், பருவமழை நாட்டின் பொருளாதாரத்தின் ஆணி வேராக பார்க்கப்படுகிறது.
Recommended Video
கடந்த வருடம் குறைந்த மழை
கடந்த ஆண்டு, பருவமழை 2 வாரங்கள் தாமதமாக வந்தது. எனவே நாட்டில் ஜூன் மாதம், மழை 33% குறைந்து பதிவாகியது. 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 க்குள் நாடு முழுக்க பருவமழை எட்டியிருந்தது. இந்த ஆண்டு நாட்டில் நல்ல மழை பெய்யும் என்றும், விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி வரும் என்றும் கணிக்கிறது வானிலை ஆய்வு மையம்.