தென்மேற்கு பருவமழை நாளை கேரளாவில் தொடங்கும்... சென்னை வானிலை மையம் தகவல்
Recommended Video
சென்னை: கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது, தென்மேற்கு பருவமழை நாளை கேரளாவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து உள்ளது.
கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக வேறு பகுதிகளுக்கு செல்லும் . வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
அதே நேரம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வீசும் காற்று தென் திசை நோக்கி நகரும் எனவும், அவ்வாறு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் கேரள மாநிலத்தில் நாளை (8 ம் தேதி) தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. .
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பெரிய நீராதாரம் இந்த தென்மேற்கு பருவமழை தான். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கும்.
கடந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பை விட 23 சதவீதம் அதிகமான மழை அங்கு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்தநிலையில், இந்தாண்டு மழை கேரளாவில் இயல்பை விட குறைவாகவே பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சராசரியை விட குறைவாகவே மழை பதிவாகும் நிலையில், இந்தாண்டு, மாற்றம் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.