கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவ காற்று - அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
சென்னை: கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவ காற்று தொடங்குகிறது; அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு விவரம்:
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை தாழ்வு மண்டலாமகவும் அதனை தொடர்ந்து நாளை மறுநாள் விரைவாக புயலாகவும் வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.
இதன் காரணமாக தென்கிழக்கு, தென் மேற்கு அரபிக்கடல் , லட்சதீவு மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் இடை இடையே மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.