ஹைவே டீ கடைக்கும் சோவியத் பிளவிற்கும் என்ன தொடர்பு தெரியுமா?.. பட்டர்ஃபிளை எஃபெக்ட்டின் பகீர் கதை
பெங்களூர் நெடுஞ்சாலையில் டீ விற்கும் ஹைவே டீ கடைக்காருக்கும் சோவியத் யூனியன் பிளவிற்கும் உள்ள தொடர்பு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும், அதற்கு பின்பான சோகத்தையும் மக்களுக்கு உணர்த்த கூடியது.
சென்னை: பெங்களூர் நெடுஞ்சாலையில் டீ விற்கும் ஹைவே டீ கடைக்காருக்கும் சோவியத் யூனியன் பிளவிற்கும் உள்ள தொடர்பு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும், அதற்கு பின்பான சோகத்தையும் மக்களுக்கு உணர்த்த கூடியது.
பட்டர்ஃபிளை எஃபெக்ட் (Butterfly Effect) என்ற ஒன்று நாம் எல்லாரும் கேள்வி பட்டிருப்போம். உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வண்ணத்து பூச்சி சிறகை அசைப்பதன் மூலம் மறுபக்கம் உலகின் ஏதோ ஒரு பகுதியில் சூறாவளி காற்று உருவாகிறது என்று. இதன் அறிவியல் உண்மை எந்த அளவிற்கு உண்மையோ, ஆனால் பொருளாதார உண்மை பன்மடங்கு மெய்ப்பிக்க கூடியதே. எங்கோ பங்குசந்தையில் மாற்றம் வருவதை சாமானியனுக்கு தெரிவிப்பதன் அவசியமும் அது தான்.
ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் காலனி இந்தியாவில் ஒரு பகுதியில் தேயிலை பயிர் விளைச்சல் அதிகமாக செயல்படுத்தப்பட்டது. அதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டனர். பஞ்சம், வறட்சி, பொருளாதார சூழல், சாதிய ஒடுக்குமுறை என பல்வேறு காரணங்களாலும் மக்கள் இங்கு வர தொடங்கினர். முன்பணம் விடுமுறை, என பல ஆசைகள் அவர்களின் மத்தியில் விதைக்கப்பட்டது அதன் விளைவு பெரும் கூட்டமாய் அதை நம்பி ஏற்று மக்கள் அங்கு வந்து குடியேற தொடங்கினார்கள். அதில் தமிழகத்தில் ஊட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் நிகழ்ந்தது.
அங்கு வந்த பின்னரே அம்மக்களுக்கு அங்குள்ள கொடுமைகளும் உணர தொடங்கியது. அடிமாட்டு வேலைகளும், ஓய்வில்லா உழைப்பும் அவர்களின் வாழ்வை குடிபெயர்ந்து எந்த விதத்திலும் மாற்றவில்லை. மாறாக அவர்களே அதற்கு பழக தொடங்கினர். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. பல தலைமுறைகளையும் அங்கே கழிக்க நேர்ந்தது .
அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அன்று இருந்த சோவியத் யூனியன் உட்பட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது .
ஆங்கிலேயே அரசு வெளியேறி சுதந்திர இந்தியா உருவான பின்னர் இந்த தேயிலை தொழில் முன்பு போல் இல்லாமல் முடங்க தொடங்கியது. இந்த நிலையில் தான் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பகுதிகளில் இருந்து அதிகம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்ட பகுதிகளில் சோவியத் யூனியனும் ஒன்று . பல குடியரசுகள் தனித்து பிரிந்து சென்றன. இந்த பிளவால் இங்கு இருந்து தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவதும் அடியோடு குறைய ஆரம்பித்தது. இதனால் இங்கு தேயிலை உற்பத்தியும் குறைந்து இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.
பல்வேறு காரணங்களால் இங்கு குடியேறியவர்கள் இன்று இந்த ஒரு முக்கிய காரணத்தினால் மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கு தயாராகினர். உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்ட பிளவினால் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உடைந்து அவர்கள் இடம்பெயரும் நிலையும் ஏற்பட்டது.
அங்கிருந்து சென்ற மக்கள் பல்வேறு பகுதிகளிலும் குடியேறினர். பெரும்பாலும் கர்நாடக எல்லைகளில் வந்து குடியேற தொடங்கினர். இவர்களின் வாழ்வும் கலைக்கப்பட்டு மொழியும் கலக்கப்பட்டது.
(இன்று)
அதிகாலை 4 மணி, மலையின் உச்சியில் சூரிய உதயத்தை காணும் ஆர்வத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் பறந்து சென்றாலும் குளிரின் தாக்கம் உடலை உறைய வைத்தது. எங்காவது ஓரிடத்தில் ஒரு கப் டீ கிடைத்தால் நிம்மதி போல் இருந்தது.
அந்த நேரத்தில் தான் ஒரு சுங்கச்சாவடியை கடக்க நேர்ந்தது, அரசு வரி போல் எண்ணி சுங்க வரியையும் கட்டிய பின்னர் அதை கடந்த சில நொடிகளிலேயே தொலைவில் ஒருவர் ஒற்றை சைக்களில் உறையவைக்கும் பனியில் தனியாக நின்று கொண்டிருந்தார்.நிச்சயம் டீ ஆக இருக்க வேண்டும் என்று ஆவலோடு அருகில் சென்று கேட்டோம். எங்கள் கணிப்பு பொய்க்கவில்லை. அதை கண்டதும் யுரேக்கா என கத்த வேண்டும் போல்தான் இருந்தது ஆனாலும் பல இடங்களில் அதையே கூற வேண்டுமே என அடக்கி கொண்டு வேகமாக வாங்கி குடிக்க தொடங்கினோம்.
எங்களை கண்டவர் எப்படியோ சற்று நேரம் தனிமையை போக்க துணை வந்துவிட்டதை போல ஆர்வமாக எளிமையாக பேச தொடங்கினார். நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு ஆர்வமாக வழி கூறினார். எங்களின் கொல்லப்பட்ட கன்னடத்தை கேட்டு யூகித்த அவர் அவரே தமிழில் பேச தொடங்கினார். ஆனாலும் அவர் தமிழில் தெளிவில்லாமல் இருக்க அவரே கூறினார். சொந்த ஊர் ஊட்டி என்றும் சிறு வயது முதலே இந்த பகுதியில் குடியேறிவிட்டதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், பெங்களூரின் பல பகுதிகளின் விளக்கத்தையும் எடுத்துரைத்தார்.
இறுதியாக உலகின் வல்லரசான சோவியத் யூனியன் பிளவில் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பையும் அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வையும் தெரிவித்த அவர் தேயிலை தோட்ட தொழிலை கைவிட்டு இன்று நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் தேநீர் விற்பதையும் உரைத்தார் .
சோவியத் யூனியனின் பிளவின் காரணமாக ஒரு பக்கம் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு கிழக்கு மேற்கு ஜெர்மனி ஒன்றிணைய ஒரு காரணமாய் இருந்ததாக கூறுவார்கள். அதே சமயம் மறுமுனையில் இப்படியான வாழ்வாதாரத்திற்கான இடப்பெயர்வும் ஏற்படத்தான் செய்கிறது.
பட்டர்ஃபிளை எஃபெக்ட் (Butterfly Effect) உண்மையோ பொய்யோ ஆனால் தனக்கான காரணங்களுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் உறைய வைக்கும் பனியில் குளிரை தாங்கிக்கொள்ள இரட்டை ஆடைகளுடன் ஒரு டீ குடிக்கும் கால அளவுக்கான பேச்சு துணையை எதிர்பார்த்து காத்துக்கொண்டுதான் இருக்கின்றது.
கட்டுரை: இர்பாத் சமீத்