எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம்- அச்சப்படும் நிலை இல்லை: எஸ்.பி.பி. சரண்; பிரபலங்கள் பிரார்த்தனை
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சப்படும் நிலை இல்லை எனவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி. நலமுடன் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதனிடையே எஸ்.பி.பி. மகன் எஸ்.பி.பி சரண் ஒரு பதிவில், தமது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அச்சப்படும் வகையில் உடல்நிலை இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் எஸ்.பி.பி நலமடைய பிரார்த்திப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலதளங்களில் பின்னணி பாடகி சித்ரா, நடிகை ஶ்ரீப்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தொடர்ந்து எஸ்.பி.பி. நலம்பெற பிரார்த்தித்து ட்வீட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.