''இசையாய் மலர்வேன்''...ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களை அழ வைத்த எஸ்பிபியின் மரணம்!!
சென்னை: உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. இவரது மரணத்தால் கோடிக்கணக்கான நெஞ்சங்கள் அழுது கொண்டுள்ளன. ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்.பி.பி, அனுமதிக்கப்பட்டு இருந்தார். துவக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். பின்னர், அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக கூறப்பட்டது. ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஜாடை செய்து பேசுகிறார். எழுதுவதற்கு முயற்சிக்கிறார். எழுந்து நடப்பதற்கு முயற்சிக்கிறார் என்று கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்று மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இதனால், உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் உடைந்தனர். மீண்டு வர மாட்டாரா என்ற ஏக்கத்தில் உறைந்தனர்.
இன்று காலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து பிரபலங்கள் மருத்துவமனை விரைந்தனர். இந்த நிலையில் இன்றும் மதியம் 1.04 மணியளவில் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
இதையடுத்து இவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அழுது கொண்டுள்ளன. பலரும் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.
''என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்'' ''அய்யோ கொடுமை'', '' Your voice won't ever fade'' ''மவுன ராகம், மவுன நேரம்'', ''மூச்சு விடாமல் பாடியவரின் மூச்சு நின்றது'' ''இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்'' ''பாடும் நிலா பறந்து போனது'' ''என்று பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.