16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ்பிபி விரும்பி சாப்பிடுவது இவைதான்!!
சென்னை: பிரபல பின்னணி இசைப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மரணம் ஒவ்வொரு இசை பிரியர்களையும் நொறுங்க வைத்து இருக்கிறது. மீடியாக்கள் அவர் பாடிய பாடல்களை இசைத்துக் கொண்டு இருக்கின்றன.
உடல் இந்த மண்ணை விட்டு நீங்கினாலும், அவரது இனிமையான பாடல் இந்த மண்ணை விட்டு நீங்காது. அவரது இனிமையான குரல் ஒவ்வொருவரையும் கட்டிப் போட்டுள்ளது. மவுனமாக அழ வைத்துள்ளது. சிவாஜி, எம்ஜிஆர், விஜய், அஜித் என்று இன்று வரை இருக்கும் ஹீரோக்களுக்கு பாடி அசத்தியவர்.
இவரது உண்மையான பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். 1966ல் தனது 20வது வயதில் பாடத் தொடங்கினார். பாடகர் மட்டுமின்றி இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறன் கொண்டவர்.
இவருக்கு 2001ல் பத்மஸ்ரீ, 2011ல் பத்மபூஷண் விருதுகளை இந்திய அரசு வழங்கியது. இளையராஜா, எஸ்.பி.பி இருவரும் நெருங்கிய நண்பர்கள். வாடா, போடா என்று பேசிக் கொள்ளும் அளவிற்கு நண்பர்கள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. அவரிடம் மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? என்ன தனித்துவம்?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படுகா, மராட்டி என 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். தன் குரல் வளத்தை பாதுகாக்க எந்த சிறப்பு கவனமும் இவர் செலுத்தியது இல்லை. இவருக்கு பிடித்த உணவு தயிர் சாதம். அசைவ உணவும் விரும்பி சாப்பிடுவார். ஐஸ்கிரீம், இனிப்பு என அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்.