எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - முதல்வர் பழனிச்சாமி
மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக 50 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
SPB எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் - மு க ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.