எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்
மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இரவு நேரத்தில் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்.பி.பி உடல் கொண்டு செல்லப்பட்டது அங்கு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும்.
Recommended Video
கொரோனா பாதிப்பினால் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்ரமணியம், விரைவில் மீண்டு வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். உடல் நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அந்த பிராத்தனையின் பலனாக எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் படிப்படியாக மீண்டு வந்தது.
கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி பாலசுப்ரமணியம் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் மீண்டும் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. உயிர்காக்கும் சிகிச்சைகள் மூலம் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது.
எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மறைவு திரை உலக பிரபலங்களை மட்டுமல்ல அரசியல் தலைவர்களை மட்டுமல்ல கோடான கோடி இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொலைக்காட்சி முன்பு அமர்ந்து பலரும் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், பல மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா இல்லை என்பதால் மறைந்த பாலசுப்ரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை உலக பிரபலங்களும். பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
கொரோனா தொற்று காலம் என்பதால் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இரவு 8 மணிக்கு மேல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் கொண்டு செல்லப்பட்டது.
பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும்.