எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்.. சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகனும் பின்னணி பாடகருமான மகன் எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தன்னை சுற்றி இருப்பவர்களை அப்பாவால் அடையாளம் காண முடிகிறது என்றும் விரைவில் குணம் அடைந்து நம்மிடம் திரும்புவார் என்றும் சரண் அந்த வீடியோவில் உருக்கமாக கூறியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியம் ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்தவர் ஆவார்., 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருக்கு வயது 74.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது.. மற்றொரு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை!
மிதமான அறிகுறி
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆரம்பத்தில் மிதமான அறிகுறிகளே இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 13ம் தேதி இரவு எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
உடல் நிலை முன்னேற்றம்
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். உயிர்காக்கும் கருவிகள் பொறுத்தி மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரது மகனும் பின்னணி பாடகருமான மகன் ஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மூச்சுவிடுவதில் சிரமம் குறைவு
எனது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனிப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை அவரால் அடையாளம் காண முடிகிறது. தொடர்ந்து வென்டிலேட்டரில் இருக்கும் எஸ்பிபிக்கு , சிறிது நாட்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மூச்சுவிடுவதிலிருந்த சிரமம் சற்று குறைந்துள்ளது.
விரைவில் குணமடைவார்
இதை நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள். அப்பா முழுவதும் குணமடைய நீண்ட காலம் ஆகும். அதற்கான சிறப்பான முயற்சிகளை மருத்துவக்குழுவினர் எடுத்து வருகிறார்கள். நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அவர் முழுவதுமாக குணமடைந்து நம்மிடம் திரும்புவார். தற்போது அவர் முழு மயக்கத்தில் இல்லை. தன்னை சுற்றி இருப்பவர்களை அப்பாவால் அடையாளம் காண முடிகிறது. அவரால் சிறிது காலத்திற்குப் பேச முடியாது. ஆனால், விரைவில் பேசும் நிலைக்கு திரும்புவார்" இவ்வாறு சரண் கூறி உள்ளார்.