தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா?.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ
சென்னை: கோவையில் கிரிக்கெட் விளையாடும் போது பந்துவீச்சில் அசத்திய அமைச்சர் வேலுமணி தண்ணீர் பிரச்சினையையும் இதே போல் தவிடுபொடியாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி உள்ளது. இங்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை எஸ்.பி.வேலுமணி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
இதையடுத்து கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுடன் இணைந்து எஸ்.பி.வேலுமணி கிரிக்கெட் விளையாடினார்.
பந்துவீச்சு
அப்போது அவர் சிறிது நேரம் பந்து வீசி விளையாடினார். இதை தொடர்ந்து ஊடகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
நீண்ட தூரம்
தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீரை தேடி நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது.
பணியாற்ற உத்தரவு
இந்த நிலையில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன. ஐடி நிறுவனங்களும் தண்ணீர் இல்லாததால் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தவாறே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
தண்ணீர் பிரச்சினை குறித்து எஸ் பி வேலுமணி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் பவுலிங்கில் அசத்திய அமைச்சர், தண்ணீர் பிரச்சினையை தவிடுபொடியாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.