இளையராஜா, பாரதிராஜா.. நட்டாத்துல நிக்கிறாங்க.. இப்படி ஏமாத்திட்டீங்களே பாலு!
சென்னை: நீ எழுந்து வருவடா பாலு.. அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்ன இளையராஜா.. நீ வந்துருடா பாலு.. என்று வெடித்துக் கதறி அழுத பாரதிராஜா.. இருவருமே இன்று அனாதையாகி நிற்கின்றனர்.. இருவரையும் ஏமாற்றி விட்டு போய் விட்டார் பாலு.
தமிழக மக்கள் பூர்வ ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்தவர்கள்.. அதனால்தான் இந்த பிறவியில் இப்படி ஒரு மகா கலைஞர்களைப் பெற முடிந்தது. அதுவும் இந்த மூவரையும் பிரித்து எதையுமே யோசிக்கவே முடியாது.
இளையராஜாவுக்கு முதல் மேடை போட்டுக் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். அன்று மேடையில் ஏற்றி விட்டவரை.. அடுத்தடுத்து தனது தோள் மீது ஏற்றி உலகம் முழுக்க கொண்டு சேர்த்தார் ராஜா.. இந்த அன்பு பிணைப்புக்கு இடையே பாரதிராஜாவின் பாசச் செருகலும் இணைய... கொடி கட்டிப் பறந்தது இந்த படைப்புக் கூட்டணி.
SPB: பாடும் நிலா மருத்துவமனையில் அனுமதி முதல் சங்கீத மேகத்தில் கரைந்தது வரை.. நடந்தது என்ன?
எனது உயிர் நண்பனே
நட்புக்கு அருமையான இலக்கணம் படைத்தனர் இந்த மூன்று பேருமே.. இளையராஜா இல்லாமல் எஸ்பிபி இல்லை.. எஸ்பிபி இல்லாமல் ராஜா இல்லை.. இவர்கள் இல்லாமல் பாரதிராஜா இல்லை.. என்று சொல்லும் அளவுக்கு யாரையுமே பிரித்துப் பார்க்க முடியாது.. இதில் யாரும் பூவும் இல்லை நாரும் இல்லை.. இயற்கையாகவே இவர்கள் இணைந்தே வளர்ந்தார்கள்.
ராஜாவுடன் இணைந்த ராகம்
யாரும் யார் மீதும் ஆளுமை செலுத்தவில்லை.. அவர் சொன்னதை இவர் கேட்டார்.. இவர் சொல்வதற்கேற்ப அவர் பாடினார்.. இசைக்கு புதிய அத்தியாயம் படைத்தவர் ராஜா என்றால்.. அவரது இசைக்கு புதிய வடிவம் கொடுத்தவர் எஸ்பிபி.. ராஜாவின் உச்சப் புகழுக்கு அவரது இசையுடன் எஸ்பிபியின் குரலும் சேர்ந்தே கொடி பிடித்தது.
மாயாஜாலம்
ராஜாவுக்காக இப்படிப் பாடுகிறாரா இல்லை எஸ்பிபிக்காக இப்படி இசையமைக்கிறாரா ராஜா என்று ஒவ்வொரு பாட்டையும் கேட்கும்போதும் சந்தேகம் வரும்.. அந்த அளவுக்கு ஒருவரது ஆன்மாவை மற்றொருவர் புரிந்து வைத்துக் கொண்டு ஜாலம் காட்டினர்.. பல நூறாண்டுகள் ஆனாலும் இந்த இசை தேவன்களை நம்மால் மறக்க முடியாது.. காலம் கடந்தும் ஞாலம் போற்றும் மகா பிதாமகர்கள் இருவருமே.
பேரிழப்பு
இன்று பாலுவை இழந்து நிற்கின்றார் ராஜா.. நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே முடியாத பேரிழப்புதான்.. எத்தனை எத்தனை ஞாபகங்கள் இந்த இருவருக்குள்ளும் இருந்திருக்கும்.. எத்தனை எத்தனை பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கும்.. சண்டைகள், சமாதானங்கள், பாசம், அன்பு, நட்பு என எல்லாக் கலவையான உணர்வும் நமக்கே தோன்றுகிறதே.. பாலுவின் இழப்பை எப்படி ராஜா தாங்கப் போகிறார் என்பதுதான் வேதனையாக உள்ளது.
விடுடா வாடா
நண்பர்களுக்குள் பிணக்கு வந்தபோது கூட தனது நண்பனை விட்டுக் கொடுக்காதவர் எஸ்பிபி.. அதுதான் அந்த இரு பெரும் மகா கலைஞர்களின் உண்மையான நட்பு.. பரவாயில்லடா விடுடா என்று நண்பனிடமே போய் அவர் சேர்ந்தபோது எத்தனை கோடி உள்ளங்களை இருவரும் குளிர்வித்தார்கள் தெரியுமா.. அத்தனை இதயங்களும் இன்று பாலு இல்லாத வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளது எத்தனை பெரிய வேதனை பாருங்கள்.
வராமல் போயிட்டீங்களே பாலு
நீ நிச்சயம் வருவே.. எழுந்து வா பாலு என்று உடைந்து போய் அன்று கூறினாரே ராஜா.. அவரை ஏமாத்திட்டீங்களே பாலு.. உங்க நண்பனை விட்டுட்டுப் போய்ட்டீங்களே.. நீங்க ஏத்தி வச்சு விளக்கல்லவா அது.. அதை கஷ்டப்படுத்தி விட்டீங்களே பாலு.. இன்னொரு பக்கம் நீ வருவடா என்று அழுது புலம்பினாரே உங்க பாரதி.. அவரையும் நிரந்தரமாக அழ வச்சுட்டுப் போயிட்டீங்களே..
மெளன ராகம்
நீங்க வெறும் பாடகன் இல்லை பாலு.. எங்களோட வாழ்க்கை.. எங்கள் வாழ்க்கையின் அடி நாதம்.. நீங்க இல்லாம எந்த நாளும் முடியாது... எல்லோரையும் தவிக்க விட்டுட்டுப் போயிட்டீங்களே பாலு... நாங்க பாடும் மெளன ராகம் உங்களுக்குக் கேட்கவில்லையா பாலு?.. மீண்டும் வரும் வாய்ப்பிருந்தால் வந்து விடுங்கள் பாலு.. நீங்கள் இல்லாத வாழ்க்கை எங்களுக்கு மிக மிக கடினம்.