பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. எஸ்பிபிக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று.. எந்த மாவட்டத்திலும் 10% மேல் போகாமல் பார்த்துக் கொள்கிறோம்.. விஜயபாஸ்கர் தகவல்
சுவாசப் பிரச்சினை
எஸ்பிபிக்கு லேசான கொரோனா தொற்று இருந்ததை அடுத்து அவர் அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் சுவாசப் பிரச்சினை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம்
இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து எஸ்பிபியின் உடல் பூரண நலம் பெற வேண்டிய திரைத்துறையினர், கர்நாடக சங்கீத வித்வான்கள், ரசிகர்கள் என வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
கொரோனா நெகட்டிவ்
இதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரது மகன் சரண் தெரிவித்தார். எஸ்பிபி தனது குடும்பத்தினருடன் சைகையில் பேசுவதாகவும் எழுதி காட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்பிபிக்கு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள், அவரது நலம் விரும்பிகள் என மகிழ்ச்சி அடைந்தனர்.
சுவாச கருவி
தனது ஐபேட் மூலம் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை அவர் காண்பதாகவும் ஐபிஎல் போட்டியை அவர் காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனாவிலிருந்து மீண்டாலும் அவருக்கு சுவாச கோளாறு இருப்பதால் செயற்கை சுவாச கருவியை எடுக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள்.
அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்பிபி தனது திருமண நாளை கொண்டாடியதாகவும் அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார். நாளுக்கு நாள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்து வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.