"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு".. கமல் உருக்கம்
எஸ்பிபி-க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை: "அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம் புகழ் வாழும்" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பிபி.. அவரது உடல்நிலை சற்று தேறி வந்த நிலையில், திடீரென ஆஸ்பத்திரி நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து கமல்ஹாசன் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.. அங்கு சென்ற அவர், எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
பின்னர், ஆஸ்பத்திரியில் செய்தியாளர்களிடம் கமல் பேசும்போது, "அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.. கிரிட்டிக்கல் ஆக இருக்கிறார், ஆனால், நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது" என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் ஒருவித பரபரப்பு தொற்றி கொண்டது.
எஸ்பிபியின் மிக நெருங்கிய நண்பர் கமல்ஹாசன்..இவர்கள் இருவரின் தென்னிந்திய திரை வருட பயணம் நீளமானது.. எஸ்பிபி ஆஸ்பத்திரியில் அட்மிட் என்றபோது, கமல் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
''இசையாய் மலர்வேன்''...ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களை அழ வைத்த எஸ்பிபியின் மரணம்!!
அதில், "அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா" என்று சொல்லி இருந்தார். தற்போது எஸ்பிபி மரணம் கமலை உலுக்கி போட்டுள்ளது.
இந்த துயரம் குறித்து தன் ட்வீட்டர் பக்கத்தில், "ஏழு தலைமுறைக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் புகழ் வாழும்.. அன்னைய்யா எஸ்.பி.பி. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு" என்று உருக்கத்துடன் கூறியுள்ளார். கமல் மற்றும் எஸ்பிபியின் ரசிகர்கள் இருவரின் பாடல்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.. எஸ்பிபியின் பாடல்களுடன் தங்கள் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.