சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை.. கர்நாடக சங்கீதம் தெரியாமலேயே.. கோலோச்சிய கலைஞன்!
சென்னை: கர்நாடக இசையே கற்காமல் சங்கராபரணத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை கேள்வி ஞானத்தால் பாடி தேசிய விருதையும் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
ஆயிரம் நிலவே வா.. ஓராயிரம் நிலவே வா என தேன் போன்ற குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கட்டி போட்டு வைத்துள்ளவர் எஸ்பிபி எனப்படும் எஸ் பி பாலசுப்பிரமணியம்!
ஆந்திர மாநிலம் நல்லூர் மாவட்டத்தில் 1946-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம். இவர் 1966ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் முதல்முறையாக பாடத் தொடங்கினார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்
உலக அளவில்
அன்று பாட ஆரம்பித்தவர் கடந்த ஆண்டு வெளியான தர்பார் வரை பாடிவிட்டார். பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பாடகர் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணிக் குரல் தருபவர் என பன்முகத் திறமை கொண்டவர்.
திரைப்பட விழா
இவருக்கு 2001-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2016-ஆம் ஆண்டு 47 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் முதல் இன்றைய அனிருத் வரை பெரும்பாலான இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
ஹோட்டல் ரம்பா
50 ஆண்டுகளாக தொடர்ந்து பின்னணி பாடி வரும் இவர், தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் எம்எஸ்வி இசையில் எல் ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து "அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு" என்ற பாடலைப் பாடினார். எதிர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியாகவில்லை.
சாந்தி நிலையம்
அடுத்தது சாந்தி நிலையம் படத்தில் "இயற்கையெனும் இளையகன்னி" பாடலை பாடினார். ஆனால் இந்த பாடல் வெளிவரும் முன்பே எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளியானது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். 6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
கர்நாடக இசை
எஸ்பிபி முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்கு தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதை 4 மொழிகளுக்கு பெற்ற ஒரே பின்னணி பாடகர் எஸ்பிபிதான். தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதையும் 25 முறை பெற்றார்.
கலைமாமணி விருது
இவர் 1981-ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 1980 களில் ஒரே நாளில் 21 கன்னட பாடல்களை பாடியுள்ளார்.தமிழ் மொழியில் ஒரே நாளில் 19 பாடல்களையும் இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை செய்தார். இவரது தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞராவார். எஸ்பிபிக்கு எஸ்பி சைலஜா, கிரிஜா உள்பட 5 சகோதரிகள், இரு சகோதரிகள் உள்ளனர். சைலஜாவும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
ஜேஎன்டியூ பொறியியல் கல்லூரி
பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜேஎன்டியூ பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை நிறுத்தி விட்டு சென்னையில் உள்ள வேறு கல்லூரியில் சேர்த்தனர். ஆனால் அவருக்கோ பாடகனாக வேண்டும் என்பதுதான் ஆசை. படிக்கும்போதே இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.