எஸ்பிபிக்கு கொரோனா குணமாகிவிட்டது.. மாரடைப்பால் காலமானார்.. மருத்துவமனை அறிக்கை
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா இல்லை என்றும் அவர் மாரடைப்பால் காலமானதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் எஸ்பிபிக்கு பொதுமக்கள் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது. பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததால் அவருக்கு செயற்கை சுவாசமும் எக்மோ கருவியும் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
''இசையாய் மலர்வேன்''...ட்விட்டர் உள்பட சமூக வலைதளங்களை அழ வைத்த எஸ்பிபியின் மரணம்!!
ஆகஸ்ட் மாதம்
எஸ்பிபியின் உடல்நிலை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் மோசமானது. இதையடுத்து திரையுலகினர், இசை ரசிகர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர். இதன் விளைவாகவும் மருத்துவர்களின் சிகிச்சையாலும் எஸ்பிபியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.
நுரையீரல்
இதையடுத்து அவருக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டது. எனினும் நுரையீரலில் அதீத தொற்று காரணமாக செயற்கை சுவாசத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை நேற்றைய தினம் மிகவும் மோசமடைந்தது.
இன்று மதியம் காலமானார்
அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில் அவர் இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஎம் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி எஸ்பிபி அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவு
அவருக்கு கொரோனாவால் நிமோனியாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.
மாரடைப்பு
அதன்அடிப்படையில் அவருக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என வந்துவிட்டது. அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகள் கொடுத்தும் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவமனை அறிக்கை
இதையடுத்து எஸ்பிபியின் உயிர் இன்று மதியம் 1.04 மணிக்கு பிரிந்தது. அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.