SPB: பாடும் நிலா மருத்துவமனையில் அனுமதி முதல் சங்கீத மேகத்தில் கரைந்தது வரை.. நடந்தது என்ன?
சென்னை: பாடும் நிலா என அன்பாக அழைக்கப்பட்டு வந்த எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று காற்றுடன் கலந்தது வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கிட்டதட்ட 35 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று காலமானது வரை முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.
ஆகஸ்ட் 5, 2020: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தனக்கு மைல்ட் அறிகுறிகளே இருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும் அவரே வீடியோ மூலம் அறிவித்தார்.
ஆகஸ்ட் 13: எஸ்.பி.பியின் உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
ஆகஸ்ட் 14: பாலு சீக்கிரம் எழுந்து வா என இளையராஜா உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
எஸ்பிபிக்கு கொரோனா குணமாகிவிட்டது.. மாரடைப்பால் காலமானார்.. மருத்துவமனை அறிக்கை
ஆகஸ்ட் 20: எஸ்.பி.பி. உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டி நாடு முழுவதும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. மெழுகுவர்த்தி ஏந்தி பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
செப்டம்பர் 6: மனைவியுடன் மருத்துவமனையில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார் எஸ்பிபி.
செப்டம்பர் 7: எஸ்.பி.பிக்கு கொரோனா குணமடைந்து அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்தும் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.
செப்டம்பர் 24: எஸ்.பி.பி.யின் உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. அவர் மிக மிக கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 25: இன்று காலை முதலே எஸ்பிபியின் உடல் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு, மாரடைப்பால் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் உலுக்கி எடுத்தது.