சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது.. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதில்
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் கோரிய முக ஸ்டாலினின் மனுவை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு தினங்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடியது.
இதில் பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.
அனுமதி இல்லை
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துரைமுருகன், வேதாந்தா நிறுவனம் உள்ளிட்டவை டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதி இல்லை என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரினார். அப்போது முதல்வர் பேசுகையில் நாடாளுமன்றத்தில் 3ஆவது பெரிய கட்சி என கூறிக் கொள்ளும் திமுக எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
முதல்வர் பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து முக ஸ்டாலின் பேசுகையில், சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடியை தூண்டிவிட்டது யார். வண்ணாரப்பேட்டைக்கு முதல்வர் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பதில் அளித்தாகிவிட்டது
இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், சிஏஏ குறித்து சட்டசபையில் பேச முடியாது. வண்ணாரப்பேட்டை பிரச்சினை குறித்து மட்டுமே பேசலாம். கடந்த கூட்டத் தொடரில் நிராகரிக்கப்பட்ட அதே தீர்மான மனு மீது இந்த கூட்டத் தொடரில் விவாதிக்க முடியாது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க முடியாது என ஸ்டாலினுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துவிட்டோம் என்றார்.
போராட்டம்
இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை தடியடி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்.
சில விஷமிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.