பாலியல் புகார்.. சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி, வழக்கை 3 மாதத்தில் முடிக்க கோர்ட் உத்தரவு
முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கை 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டுமென்ற சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட பெண் எஸ்.பி. ஒருவர், முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து, சிறப்பு டிஜிபியும் (ராஜேஷ் தாஸ்), பெண் எஸ்.பி. சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. (டி. கண்ணன்) ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட உட்புகார் விசாரணைக் குழு எனப்படும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தன் மீது குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், "விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும்" அதில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாலியல் தொல்லை தொடர்பான வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.