நாளைக்கு என்ன தினம் தெரியுமா?... ஆவின் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு
சென்னை: உலக பால் தினம் ஜூன் 1ம் தேதி கடைபிடிக்கப்படுவதை அடுத்து ஆவின் நிறுவனம் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி ஆவின் பால் பொருட்களுக்கு பாலகங்களில் 5 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் மற்றும் பால் பொருள்களின் சிறப்பு அம்சங்களை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக, ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென ஐநா சபை அறிவுறுத்தியது.
இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து 'உலக பால் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை உணர்ந்து கொள்ள இதே நாளில் பல நாடுகளில் தனிப்பட்ட மற்றும் தேசிய விழாக்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது
தலைசுற்ற வைக்கும் தண்ணீர் விலை.. அரசு நடவடிக்கை எடுக்குமா.? பரிதவிக்கும் சென்னை வாசிகள்
ஆவின் பெருமிதம்
இதுதொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை குறிக்கும் வகையில் ஜூன் 1 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படும் உலக பால் தினத்தினை கொண்டாடுவதில் ஆவின் பெருமிதம் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி
உலக பால் தினத்தை முன்னிட்டு, அனைவரும் பயன்பெறும் வண்ணம் நாளை ஆவின் பால் பொருட்களுக்கு ஆவின் பாலகங்களில் மட்டும் 5 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படும் எனவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பசும்பாலில் சத்து
பசும்பாலில் அனைத்துவித அமினோ அமிலங்களும் உள்ளன. 5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எளிதில் ஜீரணம்
ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை, ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்' என்கிறது மருத்துவ உலகம். உலகளாவிய பால் உற்பத்தியில், பசும்பால் உற்பத்தி மட்டும் 85 சதவிகிதமாக உள்ளது.
2 ரூபாய் உயர்வு
இதற்கிடையே, ஜுன் 1-ந்தேதி முதல் 2 தனியார் நிறுவனங்கள் நிலைபடுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு மொத்தம் 1.5 கோடி லிட்டர் பால் விற்பனை செய்கின்றன. இதில், ஆவின் நிறுவனத்தின் பங்கு நாளொன்றுக்கு வெறும் 30 லட்சம் லிட்டர் தான். ஆனால் தனியார் பால் நிறுவனங்களின் பங்கு நாளொன்றுக்கு, 1.25 கோடி லிட்டர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.