அட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா?
புதிய சானிடைசர் பேனாக்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.
சென்னை: இன்றைய காலத்தின் தேவையாக, மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு பயனளிக்கும் வகையில் சானிடைசர் பேனாக்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.
கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முக கவசம், சானிடைசர், சமூக இடைவெளி ஆகியவை அவசியம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். எனவே கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதில் இருந்து மக்கள் அனைவரும் முக கவசங்களையும், சானிடைசர்களையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சந்தையில் விதவிதமான முக கவசங்களும், சானிடைசர்களும் தினமும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது 'சானிடைசர் பேனா' சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த சானிடைசர் பேனா மாணவர்களுக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள்.
ஒரு பேனாவில் அதிகபட்சம் 50 மி.லி. வரை சானிடைசரை ஊற்றி வைக்க முடியும். அது தீர்ந்ததும் மறுபடியும் நிரப்பிக் கொள்ளலாம். எனவே நாம் பேனாவை பயன்படுத்திய பிறகு, கையை சுத்தப்படுத்துவது இதன் மூலம் எளிமையாகிவிடுகிறது. அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சானிடைசர்களும் வந்துவிட்ட நிலையில், இந்த வகை பேனாக்கள் நிச்சயம் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும்.
சிங்கப்பூரில் திடீரென மேலும் 481 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது
இதேபோன்று கார் சாவிகளுக்கான சானிடைசர்கள், ரூபாய் நோட்டுகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசர்கள் என விதவிதமான சானிடைசர்கள் சந்தையில் குவியத் தொடங்கி இருக்கின்றன. வருங்காலத்தில் சானிடைசர் இல்லாமல் நாம் இயங்க முடியாது என்பதை உணர்த்துகின்றன சந்தை நிலவரங்கள்.