கொடநாடு வீடியோ விவகாரம்.. சயோன், மனோஜ் டெல்லியில் கைது
டெல்லி: கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்குமாறு தங்களை அனுப்பியது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என பேட்டி அளித்த சயோன் மற்றும் மனோஜை சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையின் போது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என கனகராஜ் கொலையும் சந்தேகத்துக்கிடமானது என்றும் திடுக் தகவலை அடங்கிய வீடியோ ஆவணத்தை தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில், வெறும் கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை நடந்திருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருந்தது.
இதற்காகத்தான் நான் விடைதேடி ஆய்வுகளை மேற்கொண்டேன். கொடநாடு எஸ்டேட்டில் இருந்து திருடப்பட்ட, ஒபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரின் வீடியோ ஆதாரங்கள் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளன. எனவேதான் அவர்கள் அமைதியாக உள்ளனர். இவ்வாறு மேத்யூஸ் தெரிவித்தார்.
இதை எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார். மேலும் மேத்யூஸ் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பத்திரிகையாளர் மேத்யூஜை கைது செய்ய எஸ்பி செந்தில்குமார் தலைமையில் டெல்லிக்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர்.
அப்போது கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சயோன், மனோஜை சென்னை தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர். மேத்யூஸை போலீஸார் தேடி வருகின்றனர்.