ஆங்கில புத்தாண்டையொட்டி... அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த மக்கள்.. சிறப்பு வழிபாடு..!
சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக மக்கள் அதிகாலையிலேயே குவியத் தொடங்கினர்.
இதேபோல் தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு, ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு என பல்வேறு காரணங்களால் மக்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில் வந்துள்ள புத்தாண்டாவது வாழ்வில் ஏற்றமும் வளமும் கொடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் புத்தாண்டின் முதல் நாளான இன்று கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக மக்கள் கூடினர்.
நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை... மாநில தலைநகரங்களில் 3 இடங்களில் ஏற்பாடு..!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறை வழிபாடு நடத்தினர்.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கணபதி என்பவர், '' கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடக்கப்பட்டது. இந்தாண்டு அது போல் எதுவும் நடந்துவிடாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டேன். இந்த உலகத்தில் கொரோனாவை முற்றிலும் அழிக்க தடுப்பு மருந்துகள் கண்டறிய வேண்டும் எனவும் பிரார்த்தித்தேன்'' என்கிறார்.
புத்தாடைகள் அணிந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட காட்சிகளையும் கோயில்களில் காணமுடிந்தது. சென்னையை பொறுத்தவரை தி.நகரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி கோயிலில் ஒரு கி.மீ. வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சிறப்பு தரிசனம் செய்தனர்.