வேதங்கள் ஓதி.. மங்கள வாத்தியங்கள் இசைக்க... மழை வேண்டி மாநிலம் சிறப்பு யாகம்
சென்னை : தமிழகம் முழுவதும் பல கோவில்களில் மழை வேண்டி அறநிலையத்துறை சார்பில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 16 கலசங்கள் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதேபோல், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் மழை வேண்டி சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வருண யாகம் நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட சிவசாரியார்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரம்ம தீர்த்த குளத்தில் சிறப்பு வருண பூஜை நடைபெற்றது. யாகத்தின் போது குழல் ஒலி, யாழ் ஒலி மற்றும் மிருதங்கங்கள் வாசிக்கப்பட்டன. வீணையில் அமிர்தவர்ஷினி ராகம் மற்றும் மேகநங்கை ராகம் வாசிக்கப்பட்டது.
மூப்பனார் பிரதமராவதை.. கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆவதைத் தடுத்தது திமுகதானே.. தமிழிசை பரபர பேச்சு
சமயபுரம் மாரியம்மன்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மழை வேண்டி வருண யாகம் மற்றும் அசுர ஹோமம் யாக பூஜைகள் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மங்கள வாத்தியங்கள்
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் இருக்கும் வருண பகவானுக்கு தயிர் பால் இளநீர் மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஜல அபிஷேகமும் நடைபெற்றது. அமிர்தவர்ஷினி மற்றும் நீலாம்பரி ராகத்தில் நாதஸ்வரம் வீணை வயலின் புல்லாங்குழல் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
சிறப்பு யாகம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அமரபரணீஸ்வரர் கோயிலில் மழைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. வேதவிற்பன்னர்களும், குருமார்களும் பூரணகலசம் வைத்து, அக்னிவளர்த்தும் வேதங்கள் ஓதியும் யாகம் நடத்தினார்கள்.
ருத்ராபிஷேகம்
நெல்லை மாவட்டம் தென்காசி காசிவிசுவநாதர் ஆலயத்தில் வருணயாகம் மற்றும் ருத்ராபிஷேகம், நடைபெற்றது. நந்தியம் பெருமாளை சுற்றி தொட்டி அமைத்து நீர் நிரப்பி குளிர வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதே போல், அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தற்போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை மழையாவது கைகொடுக்குமா என்று மக்கள் எதிர்ப்பார்புடன் உள்ளனர்.