ஆன்மீகமும் அரசியலும் கீரியும், பாம்பும் மாதிரி.. ஆப்போசிட்டா போகும்.. வேற யாரு.. சொன்னது ரஜினிதான்!
சென்னை: தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 1990களிலிருந்து அரசியல் பற்றி பேசிவரும், ரஜினியும் இந்த தேர்தலில் களம் காண உள்ளதாக உறுதியோடு நம்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.
Recommended Video
2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ரசிகர்களுடனான தனது சந்திப்பின்போது, "வரப்போகும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து, 234 தொகுதியிலும் நாம் போட்டியிடுகிறோம். இது காலத்தின் கட்டாயம்" என்று அறிவித்திருந்தார்.
அதன் பிறகு எத்தனையோ சந்தர்ப்பங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் கூட, இதுவரை, கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்யவில்லை. ஆனால் கட்சி சார்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் அவர் ஆணித்தரமாக கூறியிருந்தார்.
நாளை மறுநாள்.. கோவை மாவட்ட திமுக கழக செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
ஆன்மீக அரசியல்
அது என்னவென்றால், தான் மேற்கொள்ள போவது ஆன்மீக அரசியல் என்பது தான். இவ்வாறு ஒரு வார்த்தையை அவர் கூறியபோது, மதம் சார்ந்த அரசியலை ரஜினிகாந்த் எடுக்கப் போகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்த அவர், யாருக்கும் கெடுதல் செய்யாமல் நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தருவதுதான் ஆன்மீக அரசியல் என்று ஒரு விளக்கத்தை அளித்தார். இதை, எதற்காக இப்போது நாம் சொல்கிறோம் என்று கேட்பீர்கள். காரணம் இருக்கிறது.
உச்ச நட்சத்திரம்
1995ஆம் ஆண்டு.. அண்ணாமலை, முத்து, பாட்ஷா என வரிசையாக பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ரஜினிகாந்த் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டம் உச்சத்தில் வைக்கும் என்பார்களே.. 90ஸ்.. அது கண்டிப்பாக ரஜினிகாந்த காலகட்டம்தான். அப்போது தொலைக்காட்சி சேனல் ஒன்று, ரஜினிகாந்திடம் ஒரு சிறப்பு நேர்காணல் எடுத்துள்ளது. அந்த வீடியோ தான் தற்போது வைரலாக சுற்றி வருகிறது. இதற்கும் அவரது அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.
1990ஸ் பேட்டியில் ரஜினிகாந்த் பதில்
பல்வேறு வாசகர்களும், கடிதம் மூலமாக ரஜினியிடம் கேள்வி கேட்பது போலவும், அதற்கு ரஜினிகாந்த் பதில் அளிப்பது போலவும் அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில்தான், கடலூரை சேர்ந்த ஒரு வாசகரின் கேள்வி வந்து விழுகிறது. ஆன்மிகம் மற்றும் அரசியல் இரண்டையும் ஒப்பிடுக.. என்று கேட்கிறார் அந்த ரசிகர். அதற்கு ரஜினிகாந்த் பளிச்சென்று சிரித்தபடி ஒரு பதில் சொல்கிறார். அதை ஒப்பிடவே முடியாதுங்க.. ஒப்பிடவும் கூடாது.. ஏன்னா ரெண்டுமே பாம்பு, கீரி மாதிரி. ஆப்போசிட் டைரக்சன்.. என்கிறாரே பார்க்கலாம்.
கீரி, பாம்பு
இப்படியான ஒரு கருத்தை வைத்திருக்கும் ரஜினிகாந்த், இப்போது அரசியலில், ஆன்மீக அரசியல் செய்யப்போகிறேன் என்று புது வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்ற கேள்வி அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு இயல்பாக எழுகிறது. மனிதன் என்று இருந்தால் மனதில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் தானே, இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கூட சிலருக்கு கேள்வி எழலாம். ஆனால், அதற்கும் அந்த நேர்காணலில் விடை இருக்கிறது. நீங்கள் யாருக்காவாவது, உங்களது கருத்தை மாற்றி இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "இல்லை" என்று ஸ்டைலாக கையை அசைக்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான் முழு பேட்டியை பார்த்த ரசிகர்களுக்கு, இப்போது இந்த கேள்வி எழுகிறது.
தமிழகத்தை தமிழர் ஆள்வது
சில அரசியல் தலைவர்கள், நம் தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று கூறியிருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன, என்றும் அதே நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்துள்ளது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், வரவேற்கத்தக்கது.. சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.. தமிழகத்தை ஒரு செட்டியார், ஒரு கவுண்டர், முதலியார், பிராமணர், பிராமணர் அல்லாதோர் வந்து ஆள வேண்டுமென்று சொல்லவில்லை. ஒரு தமிழன் தானே ஆள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். என்னை பொருத்த அளவில், தமிழ் பேசும் அனைவரும் தமிழர்கள்தான், என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த். அரசியலுக்காக அப்போதே இப்படி ஒரு வார்த்தையை சொல்லி வைத்துள்ள ரஜினி, ஆன்மீகம்-அரசியல் என்ற விஷயத்தில் மட்டும் குழம்பிப் போய்விட்டார் என்பது, இந்த பேட்டியில் தெளிவாக தெரிகிறது. அதனால்தான், அது இப்போது வைரலாக சுற்றி வருகிறது.