வேளாண் மசோதாவை எதிர்த்தது ஏன்? எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் விளக்கம்.. ஓபிஆர் குறித்து பரபர பேச்சு
சென்னை: வேளாண்மை மசோதாக்களில் உள்ள குறைகளை நான் தெரிவித்தேன். அதன் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தேன் என்று ராஜ்யசபாவில் வேளாண் மசோதாவை எதிர்த்து பேசியது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்பி விளக்கம் அளித்தார்.
லோக்சபாவில் விவசாய மசோதாக்களை அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் ஆதரித்தார். ஆனால் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் அதிமுக எதிர்த்தது. எனினும் மசோதாவை ஆதரித்து வாக்கெடுப்பின் போது ஆதரித்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
ராஜ்யசபாவில் நடந்த மசோதா மீதான விவாதத்தின் போது, வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
மாறப்போகும் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்.. கட்டாயமாகும் பிஎப், அலவன்சும் கூடுகிறது.. நல்ல செய்தி
மசோதாவிற்கு எதிர்ப்பு
இது தொடர்பாக அவர் கூறுகையில் "அகில இந்திய அளவில் விவசாயத்துறையை ஒழுங்குபடுத்த ஆணையம் அமைக்க வேண்டும். விவசாயத்துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகம் ஈடுபடுவதால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. ஒப்பந்தம் அளவிலான விவசாயம் உலகளவில் தோல்வியடைந்த முறை. இந்த மசோதாவால் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும்" என்று தெரிவித்தார். லோக்சபாவில் ஆதரித்து, ராஜ்யசபாவில் எதிர்த்த விவகாரம் அ.தி.மு.க.வில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் பதில் அளிக்கையில் "இரட்டை நிலைப்பாடு எல்லாம் இல்லை. லோக்சபாவில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், அரசியலுக்கு புதியவர். அவருக்கு அந்த அளவுக்குதான் விஷயம் தெரியும். அதனால் அப்படி பேசினார். நான் அரசியலுக்கு புதியவன் இல்லை. விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அது எனக்கும் உண்டு. அதை நான் செய்தேன் என்றார்.
மத்திய அரசு நடவடிக்கை
இது தொடர்பாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மேலும் கூறுகையில், வேளாண்மை மசோதாக்களில் உள்ள குறைகளை நான் தெரிவித்தேன். அதன் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ராஜ்யசபாவில் கேட்டேன்
மசோதாக்களில் உள்ள குறைகளை சொல்வதற்கு உரிமையும், கடமையும் இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று நான் ராஜ்யசபாவில் கேட்டேன். இதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். இதை நான் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. விமர்சனம் செய்வதை குறையாக கருத கூடாது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை என்பது மிக மிக அவசியமாகும்
ஆதரித்தது ஏன்
குறிப்பாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் எந்தவித சேமிப்பு வசதி இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாய விலை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதை நான் வலியுறுத்தினேன். எனினும் வேளாண் சட்ட மசோதாக்களை ஆதரித்து வாக்களிக்கும்படி அ.தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டது. கட்சி கட்டுப்பாட்டுக்கு இணங்க நான் ஆதரித்து வாக்களித்து உள்ளேன்" இவ்வாறு கூறினார்.