ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங். வாழ்த்து! இலங்கைக்கு வர அழைப்பு!!
சென்னை: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் வென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நல்லெண்ணப் பயணமாக இலங்கைக்கு ஸ்டாலின் வருகை தர வேண்டும் என்றும் ஹக்கீம் அழைப்பும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலினுக்கு ரவூப் ஹக்கீம் அனுப்பிய வாழ்த்துச் செய்தி:
தாங்கள் வெற்றிபெற்றவுடனேயே எனது டுவிட்டர் தளத்தின் ஊடாக வாழ்த்தினை பதிவிட்டிருந்த போதிலும், அதுதொடர்பில் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியொன்றை விடுப்பது சாலப்பொருத்தமெனக் கருதுகிறேன்.
தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ள அதேவேளை, தாங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றிருப்பது உங்கள் தலைமைத்துவத்தின் வல்லமையை நிரூபித்துக்காட்டியுள்ளது.
கருணாநிதியின் மறைவின் பின்னர், பொருத்தமான ஒருவரின் கரங்களில் கட்சி ஒப்படைக்கப்பட்டிருப்பது தற்கால தேர்தல் முடிவுகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்கால தேர்தல்களிலும் தி.மு.க. மேலும் பல வெற்றிகளைப் பெற்று ஆட்சிபீடமேறுவதற்கு இந்த வெற்றிகள் கட்டியம் கூறிநிற்கின்றன.
வச்சுட்டாங்கள்ல.. மேற்கு வங்கத்தில் 18 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. அடுத்த குறி என்ன?
ஜூன் 9ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகம் வர எண்ணியுள்ளேன். அப்பொழுது தங்களையும், வெற்றிபெற்ற உறுப்பினர்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாட ஆவலாக உள்ளேன்.
அதேபோன்று, தாங்கள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தி.மு.க. கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற கே. நவாஸ்கனிக்கும் உங்களின் தலைமைத்துவம் உந்துசக்தியாக இருந்தாக அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
அத்துடன், தமிழக முஸ்லிம்களையும் வாஞ்சையுடன் அரவணைத்துச் செல்லும் தங்களது மனப்பான்மை மெச்சத்தக்கது. இவ்வாறு ஹக்கீம் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.