இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கலைப்பு- தேர்தலில் சஜித் கூட்டணியில் நீடிப்போம்: ரவூப் ஹக்கீம்
சென்னை: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியில் நீடிப்போம் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து பங்கேற்பதற்காக சென்னை விமானம் நிலையத்திற்கு வருகை தந்த எம்.பி. ரவூப் ஹக்கீமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் , சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆசாத், மாவட்ட சிறுபான்மை இணைச் செயலாளர் இப்ராஹிம் கனி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர்கள் வரவேற்றனர். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் மனைவி ஹாஜியானி லத்திபா பேகத்தின் மறைவிற்கு ரவூப் ஹக்கீம் சமீபத்தில் ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ரவூப் ஹக்கீம் அளித்த பேட்டி:
துறைமுகம் எம்.எல்.ஏ. சேகர் பாபு ஏற்பாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை தந்தேன். இந்தியாவில் குடியுரிமை சட்டம் குறித்து போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் மிகவும் கவலைக்குரியது. ஒரு சட்டமூலம் நிறைவேறி இருக்கிறது என்பது தொடர்பாக தொப்புள்கொடி உறவுகளாக இலங்கையில் வாழ்ந்து வரும் நாங்களும் கவலை கொள்கிறோம். போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
தமிழில் தேசிய கீதம் தடையா?
கேள்வி: இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பிழையான தகவல். உத்தியோகபூர்வமான நிகழ்ச்சிகளில் சிங்கள மொழியில் பாடுவதுடன் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவதை முந்தைய அரசு இருந்த காலகட்டத்தில் நாங்கள் வழமையாகக் கொண்டிருந்தோம். அந்த வழமையை இப்போதைய அரசு மாற்றி, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. நல்லிணக்கம் கருதிக் கொண்டுவரப்பட்ட அந்த வழமை தற்போது மாற்றப்பட்டுள்ளதால் அது தமிழர்களின் மனதைப் புண்படுத்தி இருக்கிறது. அதுவே தற்போது இலங்கையில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்துகொண்டிருக்கிறது.
ஐநா- போர்க்குற்ற விசாரணை
கேள்வி: இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக இதுவரை விசாரணை நடைபெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்திருக்கிறார். இனியேனும் அந்த விசாரணை நடைபெறுமா?
பதில்: இலங்கையில் தற்போது உள்ள அரசு ஐக்கிய நாடுகள் சபையுடன் கூட்டாக நிறைவேற்றிய பிரேரணையில் தமது இசைவைத் திரும்பப் பெற்று இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு எடுத்து வரும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின்போது போர்க்குற்றங்கள் நடைபெற்றனவா இல்லையா என்பதில் சர்வதேச அரசியல் தலையீடு எதுவும் இருக்க கூடாது என்பது தற்போது இலங்கையை ஆட்சி செய்பவர்களின் நெடுநாள் கொள்கையாக உள்ளது. எனவே இது குறித்த சர்ச்சை சர்வதேச அளவில் இன்னும் விரிவடையும் வாய்ப்பு இருக்கிறது.
இலங்கை முஸ்லிம்கள் பாதுகாப்பு
கேள்வி: இலங்கையிலுள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்ற பிறகு அங்கிருக்கும் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பில் பிரச்சினையை நிலவியதே? அதன் தற்போதைய நிலை என்ன?
பதில்: அந்தப் பதட்டம் தற்போது ஓரளவுக்கு தணிந்து இருக்கிறது என்று இருந்தாலும், ஆத்திரமூட்டும் பேச்சுக்களைத் தொடர்ந்து பொதுவெளியில் சில அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருப்பதால், அது மனங்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்தநிலை தொடராமல் இருக்க வேண்டும் என்பதே எமது அவா.
தேர்தல் கூட்டணி
கேள்வி: நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளதாகத் தகவல் பெறப்பட்டிருக்கிறது. உங்களது தேர்தல் நிலைப்பாடு எப்படி இருக்கும்?
பதில்: திங்கட்கிழமை நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்பது உறுதியான தகவல். கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்ட சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்ற நிலையே தற்போது உள்ளது.
இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறினார்.