இலங்கையில் குண்டு வெடிப்பு சதி வேலைகள்... முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த தமிழக உளவுத்துறை
சென்னை: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்த்த சதி வேலைகள் நடந்து வருவதாக முன்கூட்டியே தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 215 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மேலும் 75 பேர் உயிர் இழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், இலங்கையில், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பு சதிகாரர்கள் 29 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, கடந்த 20 ம் தேதியே தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு குண்டு வெடிப்பு எச்சரிக்கையை தமிழக உளவுத்துறை அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை... வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக எச்சரித்திருந்தது. தமிழக உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்த மறுநாளே இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.