ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியார் திருவடி சேவை....அலங்காரமாக எழுந்தருளிய தாயாரை தரிசித்த பக்தர்கள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தாயாரின் திருவடி சேவை தரிசனம் நேற்று நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் ரங்கநாச்சியாரின் திருவடி சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சென்னை: இறைவன் இறைவியின் பாத தரிசனம் காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனின் பாதங்களை தொட்டு வணங்கினால் நமது பாவங்கள் நீங்கி புண்ணியம் அதிகரிக்கும். ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா காலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு
மண்டபத்தில் 7ஆம் திருநாளன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குறியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. இந்த கோவிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.
ரங்கநாச்சியார் தாயார் தினசரியும் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து மாலையில் புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தமிழக அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டிய நிர்பந்தம் பிரதமருக்கு ஏன்? -மு.க.ஸ்டாலின் கேள்வி
ரங்க நாச்சியார் பாத தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவில் ரங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7ஆம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும்.
தாயார் திருவடி சேவை
இந்த நாளில் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் தாயாரின் திருவடியை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
வைர பதக்கம் பவள மாலை அணிந்த தாயார்
ரங்கநாச்சியார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, வைர பதக்கம், பவளமாலை, கிளி மாலை, கையில் தங்கக்கிளி, காலில் தங்க கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவடியை தரிசித்த பக்தர்கள்
நவராத்திரி கொலு மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 8 மணிக்கு ரங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
கமலவல்லி நாச்சியார் நவராத்திரி விழா
ஸ்ரீரங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்திலிருந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கமலவல்லி தாயார் திருவடி தரிசனம்
நவராத்திரி 5ஆம் நாளான திங்கட்கிழமையன்று தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது. நேற்று மாலை கமலவல்லி தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்து, கொலு மண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளினார். இந்த வழிபாட்டில் தாயார் கிளி மாலை மற்றும் சவரிகொண்டை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.