வீட்டுக்குள்ளேயே இருந்து மனச்சோர்வா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா? ரவிசங்கர் குருஜி டிப்ஸ்
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்க கூடிய மக்கள், மனச்சோர்வு அடைய வேண்டாம் என்று, வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதை பாருங்கள்: தமிழ் புத்தாண்டுக்கு முன்பு, நமது நாட்டுக்கு வந்துள்ள இந்த பெரிய சங்கடத்தை நாம் சேர்ந்து எதிர்க்கலாம். இந்த வியாதி நமது நாட்டில் பரவாமலிருக்க நாம் எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும்.
பழைய காலத்தில், நமது பாட்டிமார்கள், கைகால் கழுவுங்கள்.. மடி.. தொடாதீர்கள் என்று சொல்வார்களே.. அதை மறுபடி நாம் கடைபிடிக்க வேண்டியதாக இருக்கிறது.
சுத்தமாக இருப்பதை யோக சாஸ்திரம் வலியுறுத்துகிறது. உள்ளத்தையும், உடலையும் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் தொடர்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக, மனதில் மகிழ்ச்சி இருக்க வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும்போது மனது பிரமை பிடித்தது போல ஆகிவிடுமோ, என்று சிலர் பயப்படுவார்கள். அவ்வாறு பயப்படத் தேவையில்லை. மகிழ்ச்சியாக இருங்கள்.
கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து எப்படி மற்றவர்களுக்கு பரவுகிறது?.. மோடியின் விழிப்புணர்வு வீடியோ
நமது உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சர்க்கரையை சாப்பிடாதீர்கள். வெல்லம் சாப்பிடுங்கள்.
மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்.. எல்லா இடங்களிலும் வெல்லம் பயன்படுத்தப்பட வேண்டும், சர்க்கரை பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது. இது சிறந்த ஒரு திட்டம். ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் வரை நமது உடலில் இருக்கக்கூடிய 50 சதவீத எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். எனவே சர்க்கரை சாப்பிடாதீர்கள்.
சுடு தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, நாம் சாப்பிட்டோம் என்றால், வைரஸ் வராமல் தடுப்பதற்கு உதவி செய்யும். மஞ்சள் பொடி, மிளகு ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்துவது, உடலுக்கு பலம் கொடுக்கும். வியாதியை தாங்கக்கூடிய சக்தியை உடலுக்கு அதிகப்படுத்தும்.
தனியாக இருக்கும்போது சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்ளலாம். சமூக வலைத்தளத்தில் பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்ட வட்டத்தை உருவாக்குங்கள். தனிமையாக இருக்கும்போதுதான் நமக்கு கிரியேட்டிவ் எண்ணங்கள், அதிகரிக்கும். அப்போதுதான் நாம் நன்கு எழுத முடியும். பாடல்கள் எழுதலாம், கதைகள் எழுதலாம், ஓவியம் வரையலாம். இதற்கெல்லாம் ஏகாந்தம் அவசியம்.
இப்போது தனியாக இருப்பதை பயன்படுத்தி, நாம் நமது திறமைகளை வெளியே கொண்டுவரலாம். நமக்கு உள்ளே உள்ள பலவிதமான கலைகளை வெளியே கொண்டு வரலாம். தியானம், பிராணயாமம், யோகாசனம் ஆகியவற்றை செய்வதற்கு மறக்கவேண்டாம். வழக்கமாக தியானம் செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை என்பார்கள். ஆனால் இப்போது உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கிறது. இனிமேல் சாக்கு சொல்லாதீர்கள்.
நேரமில்லாத காரணத்தால் எதையெதை பண்ண முடியாமல் நீங்கள் விட்டீர்களோ, அதை எல்லாம் இப்போது பண்ணுங்கள். அனைவரும் தியானம் செய்யுங்கள், யோகாசனம் செய்யுங்கள், பிராணாயாமம் செய்யுங்கள், உங்கள் உடலில் ஆத்ம சக்தியும், அமைதியும் ஏற்படும். இவ்வாறு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.