இலங்கை குண்டுவெடிப்பு .. சென்னை உள்பட 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நிறைவு
சென்னை: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை உள்பட 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை சுமார் 9 மணிநேரம் கழித்து தற்போது நிறைவடைந்தது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் இயக்கம் பொறுப்பேற்றன. தமிழகத்திலும் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம் என உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கேரள அமைப்பின் அலுவலகமான இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவரான சையது முகமது புகாரியின் வீட்டில் 7 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர்.
அது போல் சென்னை மண்ணடியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் வஹாத்தே இஸ்லாமி ஹிந்த் அலுவலகம் ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
மேலும் நாகையில் சிக்கல், மஞ்சக்கொல்லை பகுதியில் அசன்அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வந்தது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா என்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த சோதனை தற்போது முடிவடைந்தது.
சோதனை நிறைவடைந்த நிலையில் தாஜூதீன், இஸ்மாயில் ஆகியோர் கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராக அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர். மேலும் மண்ணடியில் வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.