காவல்துறை தாக்கியதில் அவமானத்தில் சீனிவாசன் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை: புழலில் காவல்துறை தாக்கியதால் கூலித்தொழிலாளி மனம் உடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறையின் செயலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீட்டு வாடகை தராததால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெயிண்டர் சீனிவாசனை, அவரது குடும்பத்தினரின கண் எதிரிலியே புழல் காவல் துறையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சீனிவாசன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் காவல் துறை ஆய்வாளர் பென் சாமை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
வாடகை தராததால் தாக்குதல்.. பெயிண்டர் தற்கொலை.. புழல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கைது செய்ய வலியுறுத்தல்
முன்னதாக பெயிண்டர் சீனிவாசன் தற்கொலை விவகாரத்தில், புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.
நடவடிக்கை எடுக்க
இந்நிலையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தீக்குளிப்பு
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "புழலில் ஊரடங்கால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருந்த கூலித்தொழிலாளி சீனிவாசனை குடும்பத்தினர் முன்பாக காவல்துறை தாக்கவே அவமானத்தில் தீக்குளித்து மாண்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகும் காவல்துறை அட்டூழியங்கள் தொடர்வது அடிவருடி அரசின் கையாலாகாதத்தனத்தையே காட்டுகிறது!
மக்களை காப்பாற்றுங்கள்
வாடகைக்காக நிர்ப்பந்திக்க வேண்டாம் என அரசு சொல்லியும், ஈவு இரக்கமின்றி வாடகைக் கேட்ட வீட்டு உரிமையாளரைத் தடுக்காமல், வறுமையில் தவித்த சீனிவாசனை காவலர்கள் தாக்கியது கொடுமை. கொள்ளையடிப்பதே கதியென்று இல்லாமல் உங்கள் காவலர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே!" என்று கூறியுள்ளார்.