பெரம்பலூர் தொகுதி மாணவர்களுக்கு யோகம்... பைசா செலவில்லாமல் படிக்க வைக்கும் பாரிவேந்தர்..!
சென்னை: பெரம்பலூர் தொகுதியை சேர்ந்த 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அந்த தொகுதியின் எம்.பி.யும், இந்திய ஜனநாயக கட்சி தலைவருமான பாரிவேந்தர்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி அதை நிறைவேற்றி வருகிறார்.
கட்சி பேதங்களை கடந்து கல்வி மீது ஆர்வமும் நல்ல மதிப்பெண்கள் பெற்று திறமையும் இருப்பவர்களுக்கு இது நல்வாய்ப்பாக கருதப்படுகிறது.
முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் இரண்டு சூப்பர் அறிவிப்புகள்.. குவியும் பாராட்டு!
இலவச உயர்கல்வி
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தபோது அத்தொகுதியில் உள்ள மாணவர்கள் 300 பேருக்கு ஆண்டுதோறும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்து இலவச உயர்கல்வி வழங்குவதாக வாக்களித்திருந்தார். அந்த வகையில் முதல் Batch 2019-2020 சேர்க்கப்பட்டு படித்து வரும் சூழலில், இந்த கல்வி ஆண்டும் பெரம்பலூர் தொகுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்குகிறார் பாரிவேந்தர்.
விண்ணப்பம்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க விரும்பும் பெரம்பலூர் தொகுதி மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக கட்சி இணையதளப் பக்கத்திலோ அல்லது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியிலோ விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குறுதி நிறைவேற்றம்
பாரிவேந்தரின் இந்த நடவடிக்கைக்கு பெரம்பலூர் தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை ஆண்டுதோறும் நிறைவேற்றி வருவதால் இளைஞர்களிடையே பாரிவேந்தருக்கு ஆதரவு பெருகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பெரம்பலூர் தொகுதியில் இருந்து செல்பவர்களுக்கு பைசா கட்டணமின்றி தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
ஜெயசீலன்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. அதில் ஒரு தொகுதியை கூட்டணிக் கட்சியான திமுகவிடம் இருந்து பெற்று அங்கு போட்டியிட காய் நகர்த்தி வருகிறார் ஐ.ஜே.கே. பொதுச்செயலாளர் ஜெயசீலன். கொரோனா காலத்தில் பாரிவேந்தர் வீட்டில் ஓய்வில் உள்ள நிலையில் அவரது பிரதிநிதியாக இப்போது பெரம்பலூரை சுற்றி வருவதும் ஜெயசீலன் என்பது குறிப்பிடத்தக்கது.