எல்லாம் உன் டிரஸ்ஸாலதான்.. மாணவியை குற்றம்சாட்டிய எஸ்ஆர்எம் வார்டன் சஸ்பெண்ட்!
Recommended Video
சென்னை: சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறத்துத்தலுக்குள்ளான மாணவியை குற்றம்சாட்டிய ஹாஸ்டல் வார்டன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரி லிப்டில் வந்தார். அப்போது அவருடன் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் ஊழியர் அர்ஜுனும் (26) வந்தார்.
லிப்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ஜுன் தனது ஆடையை களைந்து மாணவி முன்பு அருவருக்கத்தக்க செயலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி லிப்ட்டில் இருந்து இறங்க முயற்சித்தார். ஆனால் அந்த நபரோ அவரை வெளியேற விடாமல் தடுத்தார்.
அதிர்ச்சி
இதனால் அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். இதில் அச்சமடைந்த அர்ஜுன் லிப்ட்டை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கொடுத்தார். அதற்கு வார்டனோ ஒழுக்கமான உடைகளை அணியாததால்தான் அந்த ஊழியர் அப்படி நடந்து கொண்டதாக அதிர்ச்சி அளிக்கும் பதிலை தெரிவித்தார்.
அர்ஜுன்
பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்க சென்றால் மாணவியையே குற்றம்சாட்டிய வார்டனுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் அந்த நபரை அடையாளம் காட்ட மாணவிக்கு சிசிடிவி கேமராவை ஆராய அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து மாணவி அடையாளம் காட்டியதை அடுத்து மறைமலைநகர் போலீஸார் அர்ஜுனை கைது செய்தனர்.
வருத்தம்
இதனிடையே நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மாணவியை குறை கூறிய ஹாஸ்டல் வார்டனை இடைநீக்கம் செய்தும் பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் எங்கள் மாணவர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலுக்கு நாங்கள் வருத்தமடைகிறோம்.
அடையாளம்
மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஊழியர் பல்கலைக்கழக கேண்டீனில் மீதமாகும் உணவுகளை சேகரிக்க வரும் அவுட்சோர்சிங் ஒப்பந்த ஊழியராவார். பாதுகாப்பு ஊழியர்களை மீறி அவர் லிப்ட்டுக்குள் நுழைந்துள்ளார். ஹாஸ்டலில் சிசிடிவி கேமராக்களுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் எங்களால் எளிதாக குற்றவாளியை அடையாளம் காண முடிந்தது.
பாதுகாப்பு
இந்த விவகாரத்தை கவனிக்க ஒரு குழுவை நியமித்துள்ளோம். மேலும் மாணவி மீது குறை கூறிய ஹாஸ்டல் வார்டனை சஸ்பெண்ட் செய்துள்ளோம்.கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் என். சேதுராமன் தெரிவித்துள்ளார்.