எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. லிப்டில் அத்துமீறிய பணியாளர்.. போராட்டம்!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட காரணத்தால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட காரணத்தால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பல மாநில மாணவர்கள், மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகம் இந்தியா முழுக்க பிரபலம் ஆகும்.
இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பிரச்சனையாகி உள்ளது.
லிப்ட் பிரச்சனை
இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், பெண்கள் விடுதியில் லிப்டில் செல்லும் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே லிப்டில் கல்லூரி பணியாளர் ஒருவர் ஏறி இருக்கிறார். இந்த மாணவி 6வது மாடியை அழுத்திய பின் அந்த பணியாளர், டாப் மாடியை அழுத்தி உள்ளார்.
ஆடைகளை அவிழ்த்தார்
லிப்ட் நகர தொடங்கிய சில நொடியில் இந்த பணியாளர் தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து இருக்கிறார். தன்னுடைய ஆடையை அவிழ்த்தது மட்டுமில்லாமல் அந்த பெண்ணின் ஆடையையும் அவிழ்க்க முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.
வெளியே ஓடினார்
ஆனால், அந்த பணியாளர் அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று இருக்கிறான். ஆனால் அந்த பெண்ணின் கூச்சல் அதிகம் ஆனதும், பயந்து கொண்டு அந்த பெண்ணை வெளியேற விட்டுள்ளான். 6வது மாடியில் அந்த பெண் கீழே இறங்கினார்.
புகார் அளித்தார்
இது குறித்து அந்த மாணவி நேற்றே பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த பணியாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
கைது நடக்கவில்லை
கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றதும் மாணவர்கள் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவலர்களும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அந்த பணியாளர் கைது செய்யப்படவில்லை.
போராட்டம்
இந்த பிரச்சனை காரணமாக தற்போது அந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கல்லூரியை நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.