உன் டிரெஸ்தான் காரணம்.. பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவியிடம் சொன்ன எஸ்ஆர்எம் வார்டன்!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவி கொடுத்த புகாரை பெண்கள் விடுதி வார்டன் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு படிக்கும் மாணவி ஒருவர் பெண்கள் விடுதியின் லிப்டில் செல்லும் போது, பணியாளர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி உள்ளார்.
லிப்டில் இருந்த பணியாளர் அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறார். இதனால் கத்தி கூச்சலிட்ட பின் லிப்டை நிறுத்தி வேகமாக வெளியே ஓடியுள்ளார். பின் இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தார்.
மாணவர்கள் குற்றச்சாட்டு
அந்த பணியாளருக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். அதாவது அந்த தனிப்பட்ட பணியாளரை காப்பாற்றவே கல்லூரி நிர்வாகம் முயல்கிறது என்றுள்ளனர். அதனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
மோசமான கருத்து
இந்த நிலையில் அந்த மாணவி தவறான உடை அணிந்து இருந்த காரணத்தால்தான் இப்படி நடந்தது என்று அந்த கல்லூரி வார்டன் தெரிவித்து இருக்கிறார். புகார் அளிக்க வந்த மாணவியிடம் பெண்கள் விடுதியின் வார்டன், உன்னுடைய ஆடை சரியில்லை, அதனால்தான் , அவன் உன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறான் என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் கொந்தளிப்பு
இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த வார்டன், தம் அடிக்கும், தண்ணி அடிக்கும் பெண்களிடம் ஆண்கள் இப்படித்தான் தவறாக நடக்க முயல்வார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் கொதித்து போன மாணவர்கள், தற்போது அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பரபரப்பு
இந்த நிலையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியின் பெண்கள் விடுதி வார்டனுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்து வருகிறார்கள். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைக்கு எல்லாம் ஆடைதான் காரணம் என்று மோசமான பழைய வாதத்தை வைப்பீர்கள் என்று கேட்டுள்ளனர்.