எஸ்எஸ்எல்சி மார்க் இல்லாத மதிப்பெண் பட்டியல்...பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது புதுசு
பத்தாம் வகுப்பில் மதிப்பெண்கள் இல்லாத மதிப்பெண் பட்டியல் தயாராகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது புதுமையாகும்.
சென்னை: நீங்க எத்தனை மார்க்...இது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 ரிசல்ட் வந்த உடன் அனைவரும் கேட்கும் கேள்வி. பல பெற்றோர்கள் பிள்ளைகளின் மதிப்பெண் பட்டியலை ஸ்டேட்டஸ் ஆக வைத்து பெருமைப்பட்டுக்கொள்வார்கள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மதிப்பெண்கள் இல்லாமல் வெறும் தேர்ச்சி என்று மட்டுமே போட்டு மதிப்பெண்கள் பட்டியல் தரப்போகிறது பள்ளிக்கல்வித்துறை. இது அனைத்து மாணவர்களும் படிப்பில் சமம் என்ற சமச்சீர் நிலையை உருவாக்கியுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்து சமச்சீர் கல்வியை அப்போதய திமுக அரசு கொண்டு வந்தது. நன்றாக படித்த மாணவர்கள் 495 மதிப்பெண்கள் எடுத்து முதல் மதிப்பெண் பெற்றனர். எஸ்எஸ்எல்சியில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களைப் போட்டு விளம்பரம் செய்து பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இது போல் விளம்பரம் செய்வதால் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளையும் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தினர். இதனால் பல கல்வியாளர்கள் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு மன அழுத்தம் தருவதாக கூறியதோடு குழந்தைகளை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக உருவாக்கக் கூடாது என்று சொல்லி வந்தனர்.
பள்ளி மாணவர்களின் புகைப்படத்தையும், மதிப்பெண்களையும் போட்டு விளம்பரம் செய்யக் கூடாது என்று அரசு தடை விதிக்கவே, இந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் நீட் மதிப்பெண் விளம்பரங்கள் இன்னமும் நாளிதழ்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி முறையே மாறி விட்டது. வகுப்பறைகளுக்கு சென்று நண்பர்களுடன் பேசி சிரித்துக்கொண்டே படித்த காலம் மாறி ஆன்லைன் வகுப்புகளில் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு படிக்கும் காலம் வந்தது.
டீச்சர் திட்டினாலும் உரைக்கவில்லை. பாராட்டினாலும் மகிழ்ச்சியடைய முடியவில்லை. இடைவேளை நேரத்தில் நடந்து போய் பாட்டி கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கம் பல மாணவர்களிடம் எட்டிப்பார்த்தது. அவசரம் அவசரமாக பள்ளிக்கு போன காலங்கள் கனவுகளாகிப் போனது.
2019 - 2020ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மதிப்பெண்களுடன் கிடைத்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முழு ஆண்டிலும் கிடைத்தது. அதே நேரத்தில் 2020 - 2021ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் பள்ளிக்கு போகாமல் பாடங்களை படிக்காமல் தேர்வும் எழுதாமல் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். வெறும் தேர்ச்சி என்று மட்டுமே போட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி
தேர்ச்சி எப்படி
தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களுக்கு இது மன கவலை தரக்கூடியதுதான். என்ன செய்வது இந்த ஆண்டு இப்படித்தான் என்றாகி விட்டது.
அரசு உறுதி
நீ வாங்கிய மதிப்பெண் எத்தனை என்று யாரும் கேட்கப்போவதில்லை என்பதே மன நிம்மதி தரக்கூடியதுதான். மதிப்பெண்கள் இல்லாமல் பிளஸ் 1 வகுப்புக்கு அட்மிசன் போட்டு விட்டனர். இந்த ஆண்டு ஆன்லைன் வகுப்புதான் என்று அரசு உறுதியாக சொல்லி விட்டது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது.
பிளஸ் 2 மதிப்பெண்
இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று அறிவித்து விட்டனர். அந்த மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மதிப்பெண்கள் அவசியம் தேவை. எந்த முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் உயர்கல்வி படிப்பதற்கு நுழைவுத் தேர்வு நடைபெறுமா என்று எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
கொரோனா அலைகள்
கொரோனா இரண்டாம் அலை முடியும் முன்பே மூன்றாம் அலையும் வந்து விட்டது. இந்த கல்வியாண்டு இப்படியே கடந்து விடுமோ என்று பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். மாணவர்களுக்கோ இப்படியோ பல அலை வந்து பள்ளிக்கு போகாமலேயே பாஸ் ஆகி வேலைக்கு போய் விட வேண்டும் கடவுளே என்று வேண்டுதல் வைக்க ஆரம்பித்து விட்டனர்.